மிகவும் பழமையானது முத்தாலங்குறிச்சி சிவன்கோயில். இந்த கோயில் வளாகத்தில் சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர், அபூர்வமான முக்குறுணி அரிசி விநாயகர், ஒரே கல்லில் மூலவராக வீற்றிருக்கும் லெட்சுமி நரசிம்மர் கோயில் ஆகியவை உள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையின் அகோபிலம் என இந்த ஆலயம் போற்றப்படுகிறது. ஆயிரம் வருடம் பழமையான, மிக பிரமாண்டமான இந்த கோயில் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் அழிந்து போய் விட்டது. இந்த ஆலயத்தினை சுமார் 400 வருடங்களுக்கு வீரபாண்டியன் என்ற மன்னர் சிறிய ஆலயத்தினை கட்டி அதற்குள் அனைத்து தெய்வங்களையும் வைத்து விட்டார் . அதன் பின் ஆலயங்கள் போதிய பூஜை இல்லாமல் சிதில மடைந்தது. தொடர்ந்து அறநிலையத்துறை சார்பில் கடந்த ஆண்டு ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பூசாரி நியமிக்கப்பட்டு தற்போது பூஜை நடந்து கொண்டிருக்கிறது.மேலும் இந்த கோயிலில் அறங்காவலர் நியமிக்கப்பட்டு கோயில் திருப்பணிசெய்து, சிதிலமடைந்த கோயிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
லெட்சுமி நரசிம்மர் பக்த ஜன சபா, வீரபாண்டீஸ்வர் பக்த ஜனசபா போன்றவை அமைக்கப்பட்டு அதன் மூலம் திருப்பணி செய்யவும் பக்தர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையில் அறநிலையத்து மூலமாக மாவட்ட அனுமதி, மாநில அனுமதி பெற்று திருப்பணி செய்ய தயார் நிலையில் இந்த ஆலயம் உள்ளது.
முதல் கட்டமாக கோயிலில் பழமையான தீர்த்த கிணற்றை தூர்வார லெட்சுமி நரசிம்மர் பக்தஜனசபா நடவடிக்கை எடுத்தனர். அதற்காக ராட்சத இயந்திரம் கொண்டு கிணறு தூர்வாரப்பட்டது. இந்த நிகழ்ச்சில் லெட்சுமி நரசிம்மர் பக்த ஜன சபாவின் தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சேசப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். கிணறு 8 அடி தூர் வாரப்பட்டு சகதிகள் அகற்றப்பட்டது. மேலும் இந்த கிணறு கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு பிறகு உபயோகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த கோயிலுக்கு பக்தர்கள் சார்பில் திருப்பணி செய்ய வருகிற 23 ந்தேதி சிறப்பு கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளது.
தாமிரபரணியின் அகோபிலம் என அழைக்கப்படும் இந்த ஆலயம் விரைவில் புது பொலிவு பெறும் என பக்தர்கள் நம்பிக்கையோடு உள்ளனர்.


