
திருப்பதி செல்ல வேண்டும் என்பது வாழ்க்கையில் எல்லோருடை தீராத ஆசையாகும். திருப்பதி சென்றால் திருப்பம் கிடைக்கும் என்பது மக்கள் மனதில் ஒலிக்கும் பகவான் மந்திரம். ஆனால் திருப்பதி செல்ல வேண்டுமென்றால் அது சாதாரண காரியமா? அதற்கு பொருள் வேண்டும், நேரம் வேண்டும். அவையெல்லாம் கிடைத்தாலும் பகவானை ஒருநிமிடம் கூட பார்க்க இயலாத அளவுக்கு கூட்டம். ஆனாலும் கூட திருப்பதி சென்று பெருமானைப் பார்க்க மக்கள் ஆவலாக உள்ளார்கள்.
ஆனால் வடதிருப்பதிக்குச் செல்ல முடியாதவர்கள், ஏழுமலையானை தரிசிக்க அங்கு செல்ல முடியாதவர்கள் கூட திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி கரையில் உள்ள திருப்பதிக்கு நிகரான தென்திருப்பதிக்குச் செல்லலாம். அங்குள்ள எம்பெருமான் வேங்கட மலையானைத் தரிசிக்கலாம்.
அதாவது ஒருமனிதன் திருப்பதியில் நேர்ந்த நேர்ச்சை தென்திருப்பதியாம் இத்திருப்பதியில் செலுத்தலாம். ஆனால் இந்தத் தென்திருப்பதியில் நேர்ந்தால் இங்குதான் மீண்டும் செலுத்த வேண்டும். அதெப்படி? அதை பற்றிதான் தற்போது பேசப்போகிறோம்.
தாமிரபரணி கரையில் ஒரே ஊரில் தென்திருப்பதி, கீழத்திருப்பதி, மற்றும் காளகஸ்தி தலமான சிவன்கோவிலையும் வணங்கும் வாய்ப்பு இருந்தால் மிகச் சிறப்பானதாகும். அப்போதுதான் திருப்பதி சென்று வந்த புண்ணியம் பெறலாம். அந்தப் பெருமையைதான் திருவேங்கடநாதபுரம் பெற்றிருக்கிறது. இந்த ஊருக்கு திருவணாங்கோயில், சங்காணி, குன்னத்தூர் என்று பல பெயர்கள் உண்டு. இவ்வூர் எப்படி திருப்பதிக்கு இணையானது. அதைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்.
திருவேங்கடநாதபுரம் கள ஆய்வு செய்ய 20.10.2024 அன்று கிளம்பினோம். காலை 8 மணிக்கு நானும் சிஷ்யன் காமராசு செல்வனும் திருநெல்வேலி நோக்கி கிளம்பினோம். எங்களுக்கு வழிகாட்ட ஸ்ரீவாசன் சாமி கோடீஸ்வர நகரில் காத்து இருந்தார்.
தினமலர் ஸ்ரீவாசன் சாமி என்றால் நெல்லையில் பிரபலம். தினமலரில் 50 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம். அதோடு மட்டுமல்லாமல் திருவேங்கட நாதபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பயனற்று கிடந்த பலகோயிலுக்கு கும்பாபிசேகம் செய்ய காரணமாக இருப்பவர். இவ்வூரில் இருந்து வெளியூரில் போய் வாழும் பல மக்களை ஒன்றிணைத்து பல்வேறு திருப்பணிகளைசெய்து வருபவர்.
என்னோடு பல இடங்களில் பயணித்து வருகிறார். குறிப்பாக ராட்டினம் திரைப்பட இயக்குனர் கே.எஸ். தங்கசாமி அவர்களின் இரண்டாம் படமான எட்டுத்திக்கும் மதயானை படத்தில் அவருக்கு உதவியதோடு மட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர்.
தாமிரபரணி மகா புஷ்கரத்தில் இவரத பயணம் மிக முக்கியமானதாகும். பல படித்துறைகளில் பூஜை நடக்க காரணமாக இருந்தவர் இவர்தான். எனவே திருவேங்கடநாதபுரம் என்றவுடனே இவர் நினைவு தான் எனக்கு வந்தது.
எனவே என்னை கூட்டிக்கொண்டு திருவேங்கடநாதபுரம் சென்றோம். கோடீஸ்வரநகரில்இருந்து பேட்டை செல்லும் வழியில் கிளம்பி தர்கா வழியாக திருவேங்கடநாதபுரம் சாலையில் கிளம்பினோம். ஒருபுறம் குளம் மறுபுறம் வயல்வெளிகள். சிறிது தூரத்தில் மலையாள மேடு என்ற பகுதி வந்தது.
இந்த ஊருக்கும் குன்னத்தூர்பொத்தைக்கும் ஒரு சம்பந்தம் உள்ளது என்றார் சீனிவாசன் சாமி. என்ன சாமி என்று கேட்டபோது. மலை அருகில் உள்ள ஆழமான பகுதியில் உள்ள மேட்டில் உள்ள குடியிருப்பு என்றார். அதாவது மலை +ஆழம் + மேடு = மலையாழ மேடு தான் மருவி மலையாள மேடு என ஆகி விட்டது.
மிகவும் செழிப்பான பகுதி அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து ஓடி வரும் கோடகன் கால்வாய் வழியாக இந்த வயல்வெளிகளுக்கு தண்ணீர் தருகிறது. நாங்கள் செல்லும் போது அறுவடை நடந்து கொண்டிருக்கிறது.
கார்சாகுபடிக்கான அறுவடை இது. பிசான சாகுபடி செப்டம்பரில் ஆரம்பித்து இருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஆரம்பிக்கவில்லை. தொடர்ந்து பிசான சாகுபடி விரைவில் ஆரம்பிக்கும் சூழ்நிலை உள்ளது. வட கிழக்கு பருவ மழை பெய்யும் நிலையில் தான் உள்ளது. எனவே வேக வேகமா அறுவடை நடந்து கொண்டிருக்கிறது.
எங்கள் கார் திருவேங்கடநாதபுரம் வந்து சேர்ந்தோம். அங்கே எங்களுக்காக தருவைபத்திரிக்கையாளர் பிச்சுமணி காத்து இருந்தார்.
பிச்சுமணி எங்களோடு தருவையில் பயணித்தவர். நாங்கள் திருவேங்கடநாத புரத்தில் பயணிக்கிறோம் என்றவுடன் ஆர்வத்துடன் எங்களோடு வந்து சேர்ந்து கொண்டார். நாங்கள் சந்தோசமாக அவருடன் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தோம். அங்கே அழகான ஆற்றங்கரை இருந்தது. முதலில் நாங்கள் பைலர் தீர்த்தம் என்ற இடத்துக்கு வந்தோம். இதுதான் திருவேங்கடநாதபுரம் ஆரம்ப இடம். எதிரே தருவை கிராமம் உள்ளது. அதற்கு முன்பு நாங்கள் ஏற்கனவே சிவிலி ராஜா கோயில் வழியாக வந்து ஆற்றுக்குள் குளித்த இடம் உள்ளது. திருவேங்கடநாதபுரம் மேற்புறம் கருங்காடு உள்ளது.
ஒவ்வொரு ஊருக்கும் தூரம்அதிகம். இடையில் அதிகமான வயற்வெளிகள் இருந்தது. எங்கிருந்து பார்த்தாலும் மச்சள் நிறத்தில் பயிர்கள் விளைந்து கிடந்தது.
பைலர் தீர்த்தம் என்ற இடத்துக்கு செல்லும் வழியில் சுத்தமல்லி அணைக்கட்டு வழியாக வரும் திருநெல்வேலி கால்வாயை கடந்து, சென்றோம். அங்குள்ள வடிகால் கால்வாய் வழியாக பைலர் மண்டபத்துக்கு வந்தோம்.
மண்டபம் சிறப்பாக இருந்தது. பிற்காலத்தில் இந்த மண்டபத்தில் வெள்ளை அடித்து வைத்திருந்தார்கள்.
இந்த இடம் பைலர் வாழ்ந்த இடம் என கருதுகிறார்கள்.
தாமிரபரணி கரையில் தற்போது இந்தக் கோயில் உள்ள இடம் புராண காலத்தில் பெருங்காடாக இருந்தது. இந்த ஊரை அப்போது மக்கள் வைப்பராச்சியம் மற்றும் சாலிடி வாடிபுரம் என்று அழைத்து வந்தனர். அந்தச் சமயத்தில் பக்கத்தில் உள்ள குன்னத்தூர் குன்றை சுவேதா மலை என்றும் அழைத்து வந்தனர். இந்த பெருங்காட்டு பகுதியில் தான் மகா பாரதம் நமக்கு அருளிய வியாசமா முனியின் முதல் சீடாரான பைலர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். இவர் தாமிரபரணிகரையில் அமர்ந்து ஸ்ரீனிவாச பெருமானை நினைத்து தவம் செய்தார். அப்போது இவ்வூரில் கோயிலோ அல்லது எம்பெருமான் சீனிவாசருக்கு சிலையோ கிடையாது. ஆனால் பைலர் மனதிற்குள் பெருமானை நினைத்து பூஜை செய்தார். சுமார் ஒரு கோடி மலரைப் போட்டு அர்சசனை செய்தார். அப்போது அந்தக் கோடி மலரும் ஒன்றாகச் சேர்ந்து மிகப்பிரகாசமான ஒளியாக வானில் தோன்றியது. அந்த ஒளியில் பகவான் தோன்றினார். அவரது காலடியில் தாமிரபரணி தாய் தெய்வத்தையும் கண்டார் பைலர்.
ஒரே இடத்தில் இரண்டு தெய்வத்தைக் கண்ட பைலர் கண்ணீர் மல்க வேண்டி நின்றார்.
“பகவானே உங்கள் வடிவத்தை நான் காண பேறு பெற்றுள்ளேன். வடக்கே வேங்கட மலையான திருப்பதியில் குடி கொண்ட வெங்கடாசலபதி பெருமானே இந்த அடியவனுக்காக இங்கு காட்சி கொடுத்துள்ளீர். இதேபோல் இங்கு நீவிர் புடைசூழ தோன்றி பக்தர்களுக்கு அருள் வழங்க வேண்டும். உம்மை தேடி வரும் பக்தர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய வேண்டும்” என்று கேட்டு கொண்டார்.
பின்பு பூமிதேவி, அலமேலு மங்கையுடன் இங்கேயே ஸ்ரீனிவாச பெருமாளை பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார்.
இவர் கட்டிய கோயில்தான் தென்திருப்பதி என அழைக்கப்படும் திருவண்ணாங்கோயில். நாம் இருக்கும் மண்டபம் தான் பைலர் தவமிருந்த மண்டபம்.
இந்த மண்டபமும் நாம் தருவையில் பார்த்தது போலவே அறுங்கோண வடிவத்தில் தான் உள்ளது. உள்ளே 11 தூண்கள் உள்ளது. மழை வெள்ளம் வந்தால் வடிந்து செல்ல வழி அமைக்கப்பட்டுள்ளது. தூண்களில் கை கூப்பி வணங்கும் வடிவத்தில் பல புடைச்சிற்பங்கள் உள்ளன. முகப்பிலும் அநேக சிறப்பங்கள் உள்ளது.
உள்ளே கல்வெட்டுகள் உள்ளதா? எனத் தேடிப்பார்த்தோம்.கிடைக்கவில்லை. ஒருவேளை வெள்ளையடித்திருக்கும் இடத்துக்குள் கல்வெட்டு காணாமல் போயிருக்குமோ என பயம் தோன்றியது.
இந்த மண்டபத்தினை ஸ்ரீனிவாச மண்டபம் என்றே அழைக்கிறார்கள். உள்ளே பருத்த வடிவில் மீன் சின்னம் உள்ளது. இந்த சின்னம் பாண்டியரின் சின்னமோ அல்லது நீர் வளமையை குறிப்பிடும் வகையிலோ இந்த மீன் சின்னம் உள்ளது.
எனவே இந்த இடத்தில் உள்ள வெள்ளையை முழுவதும் அப்புறப்படுத்தி விட்டு, ஆய்வாளர்களை அழைத்து வந்து இந்த மண்டபத்தினை காட்டினால் நிச்சயம் இதன் காலகட்டத்தினை அறிந்து விட முடியும்.
அந்த மண்டபத்தினை சுற்றி வருகிறோம்.முகப்பில் சிம்மன் யானை, யாழிவடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 தலைமுறை மக்கள் இங்கே வாழ்ந்து வருகிறார்கள். இந்தமண்டபம் 16 ஆம் நூற்றாண்டை சார்ந்தாக கூடஇருக்கலாம். அதை ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த இடத்தில் ஆற்றில் குளிப்பவர்கள் கவனமாக குளிக்கவேண்டும். இங்கே ஆற்றுக்குள் மரண நீர் சுழல் உள்ளது என போர்டு எழுதி வைத்திருக்கிறார்கள்.
மண்டபத்தினை சுற்றி வருகிறோம். பராமரிப்பு இன்றி மண்டபம் இடிந்து கிடக்கிறது. ஒரிடத்தில் மரம் முளைத்து மண்டபத்தினை இடித்துக்கொண்டிருக்கிறது. எனவே இந்த மண்டபத்துக்கு போதிய பராமரிப்பு இல்லை என புரிந்துகொண்டோம். ஆனாலும் முன்பக்கம் இரும்பு கேட் அமைத்து பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.
இந்த மண்டபத்துக்கு முன்னால் உள்ள வடிகாலில் உள்ள பாலமும் மிகச்சிறப்பாக இருக்கிறது. எத்தனை வெள்ளம் வந்தாலும் தாங்க கூடிய அம்சம் பொறுந்தியதாக உள்ளது. இதை பார்த்துக்கொண்டே நாங்கள அருகில் உள்ள இடத்துக்கு வந்தோம்.
அங்கே ஸ்ரீ ஐயப்ப நயினார் சாஸ்தா திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் பற்றிய வரலாற்றை அங்குள்ளவர்களிடம்கேட்டு தெரிந்தகொள்ளவேண்டும்.
மீண்டும் நாங்கள் திருவேங்கடநாதபுரம் தென்திருப்பதி கோயிலை நோக்கி வந்தோம்.
எங்கள் கார் மிகப்பெரிய ஏற்றம் வழியாக ஏறி கோயிலை¬ வந்தடைந்தது.
சீனிவாச சாமி எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து கொண்டிருந்தார்.
அவர் எங்களை கோயில் தரிசனத்துக்கு உள்ளே கூட்டி வந்தார்.
அதற்கு முன்பாக கோயில் வராற்றை அறிந்து கொள்வது அவசியம். ஏன் என்றால் நான் ஏற்கனவே தினகரன் நாளிதழுக்காக இந்த கோயில் வரலாற்றை எழுதியிருக்கிறேன். அதுகுறித்து இனி பார்கலாம். பைலர் தவம் செய்தது கோடி மலர்களால் அர்சித்த கதையெல்லாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.
பைலர் பிரதிஷ்டை செய்த கோவில் மிகச்சிறு கோவிலாக இருந்தது. காலங்கள் உருண்டோடின.
ஒரு காலத்தில் இப்பகுதியை வெங்கடப்ப நாயக்கர் என்ற மன்னர் ஆண்டு வந்தார். இவருக்குக் குழந்தை பேறு இல்லை. இதனால் இவர் பல கோயில்கள் சென்று குழந்தை செல்வம் வேண்டி தவம் இருந்து வந்தார். அதன்பின்பு தாமிரபரணியில் பைலருக்கு எம்பெருமான் ஸ்ரீனிவாசர் காட்சி அளித்த ஸ்ரீனிவாசர் தீர்த்த கட்டத்தில் வந்து ஆற்றில் மூழ்கி எழுந்தார். அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. அதில், “மன்னா நீ ஆயிரம் குழந்தைகளுக்கு இந்தக் கோவிலில் வைத்து அன்னதானம் வழங்கு. அவர்கள் பசியை போக்கினால் உனக்கு குழந்தை பேறு கிடைக்கும்” என்றது. மன்னனும் பெருமானை வணங்கி எழுந்தான். ஒரு பெரிய உருளிப் பானையில் பொங்கலிட்டான். பெருமானுக்கு படையல் படைத்தான். பின் ஆயிரம் குழந்தைகளின் பசியைப் போக்கினார். பகவான் உடனே அவருக்கு அருளினார். அவர் மனைவி கர்ப்பம் தரித்தாள். 10 மாதத்தில் அவருக்குக் குழந்தைச் செல்வம் கிடைத்தது. அவர் தன் மகன் இளவரசருக்கு சீனிவாசன் என்று பெயர் வைத்தார். தற்போதும் குழந்தை இல்லாதவர்கள் இதேபோல் உருளிப்பானையில் பொங்கலிட்டு தானம் வழங்கி, அந்தப் பானையை கொடிமரம் அருகே கவிழ்த்து வைக்கின்றனர். அதன்பின் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது என்பது ஐதீகம்.
இதுபோலவே குழந்தைபேறு பெற்ற வெங்கடப்ப நாயக்கர் கோவிலைக் கட்ட ஆரம்பித்து விட்டார். கோயிலுக்கு வருகின்றவர்களின் பசியைப் போக்க விளை நிலங்களை ஏக்கர் கணக்கில் தானம் செய்து கோயிலுக்கு எழுதி வைத்து விட்டார். அதன்பின் இந்தக் கோயிலை சுற்றி ஒரு கிராமத்தை அமைத்தார். அதற்கு “வேங்கடநாதபுரம்” என்று பெயர் வைத்தார்.
இந்தக் கோவில் தீர்த்தக் கட்டமான “ஸ்ரீனிவாசன் தீர்த்தக் கட்டம்” என்பது பாபநாசத்திற்கு நிகரானது. இங்கு தாமிரபரணி ஆற்றின் வடகரையில் ஒரு கல்மண்டபமும், ஆற்றில் இறங்க படித்துறையும் அமைந்துள்ளது. இந்தத் தீர்த்தக்கட்டம் செல்ல கோவிலில் உள்ள தெற்கு ரதவீதி வழியாக பாதை உள்ளது. தாமிரபரணியைப் பொறுத்த வரை இந்த ஊரில் மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகிறது.
மணி மண்டபத்திற்கு எதிரே மதில் சுவரின் உட்புறம் தென்கிழக்கு மூலையில் ஒரு நெல்லி மரம் உள்ளது. இதை தலவிருட்சம் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். மற்றவர்கள் மூங்கில் மரமே இக்கோவிலின் தலவிருட்சம் என்றும் கூறுகிறார்கள். ஒருகாலத்தில் இப்பகுதி வேணுவனம் என்னும் மூங்கில் காடாக இருந்துள்ளது. ஆகவே, மூங்கிலை தலவிருட்சம் என்று கூறுவது உண்மையாகக் கூட இருக்கலாம். நம்முடன் வந்த தினமலர் சீனிவாச சாமி கூட தலவிருட்சம் மூங்கில் மரம் என்றே கூறினார். திருப்பதி கோவிலுக்கு அருகே புஷ்கர்ணி என்ற தீர்த்தம் இருப்பதுபோல் இக்கோவிலில் தாமிரபரணியில் ஸ்ரீனிவாச தீர்த்தம் உள்ளது.
திருப்பதியின் அருகே பாபநாசம் என்று மற்றொரு தீர்த்தம் உள்ளது. அதேபோல் தென்திருப்பதியான இக்கோவிலில் தாமிபரணி கரையிலே பாபநாசம் உள்ளது. திருப்பதியில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியாக விழுகிறது. இங்கு தாமிரபரணி நீர்வீழ்ச்சியாக விழுந்து இக்கோவில் அருகே ஆறாக ஓடுகிறது. திருப்பதி மலை வெண் கற்களால் ஆனது. அதேபோல் இக்கோவில் குன்றுகளும் வெண் கற்களால் உள்ளது. வடதிருப்பதியில் ஏழு மலைகளின் நடுவே ஸ்ரீனிவாசர் குடி கொண்டுள்ளார். அதேபோல் திருவேங்கட நாத புரத்தில் ஏழு நிலைகள் தாண்டி ஸ்ரீனிவாசர் குடிகொண்டுள்ளார். அந்தநிலை கீழ திருவேங்கடநாதபுரம் ஊரைக்கடந்து ஒரு மேடு, குளத்தைத் தாண்டிச்சென்றதும் ஒரு மேடு, யானை சரிவு பாதை வழியாக கீழ ரதவீதிக்கு வருவது ஒரு மேடு, பனிரெண்டு படிகளைத் தாண்டி கோயில் இருக்கின்ற பகுதி ஒரு மேடு. உற்சவர் இருக்கின்ற அர்த்த மண்டபம் ஒரு நிலை. இறுதியாக கருவறை ஒரு நிலை. மொத்தம் ஏழு மலைகளுக்குப் பதில் இங்கு 7 நிலைகள் உள்ளது.
பெரும்பாலுமே திருப்பதிக்குச் செல்பவர்கள் காலகாஸ்தி சென்று வணங்கிவிட்டு அங்கு சிவபெருமானின் அருள்பெற்று பின் கீழ திருப்பதியை வணங்கித்தான் ஏழுமலையானை வணங்க மலை ஏறுவார்கள். அதேபோல் இந்த ஊரில் முதலில் காலகாஸ்தியாக நவகைலாயங்களில் ராகு ஸ்தலமான ஸ்ரீகோதபரமேஸ்வரர்- சிவகாமி அம்பாளை வணங்குறார்கள். அதன்பின் கீழ் திருப்பதியில் வரதராஜபெருமான் திருக்கோயிலுக்கு சென்று அவரையும் வணங்குகிறார்கள். இறுதியாக வேங்கடநாதன் எம்பெருமான் ஸ்ரீனிவாசரை வணங்க ஏழு நிலைகளைத் தாண்டி வருகிறார்கள். ஆக இந்த இடத்துக்கு வந்தால் திருப்பதிக்குச் சென்ற வந்த அனைத்து புண்ணியங்களும் கிடைக்கிறது.
இந்த கோயிலில் நாம் பல அற்புத மனிதர்களை சந்தித்தோம்.