தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற அனைத்து தேர்தல்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பேராயர் தேவசகாயம் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல இறுதிகட்ட தேர்தல், நாசரேத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் எஸ்.டி.கே.ராஜன் அணியினருக்கும், டி.எஸ்.எப். அணியினருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தொடர்ந்து வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்றது. இதில் டி.எஸ்.எப். அணி சார்பில் போட்டியிட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், பல்வேறு கமிட்டி உறுப்பினர்களுக்கு நடந்த தேர்தலில் இரு தரப்பிலும் இருந்து தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து நேற்று டி.எஸ்.எப். அணியினர் பதவியேற்பதற்காக தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள திருமண்டல அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது அங்கு அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. பேராயர் தேவசகாயமும் அங்கு இல்லை என கூறப்படுகிறது. எனவே நிர்வாகிகள், அலுவலக வாசலில் அமர்ந்திருந்த பிரதம பேராயரால் நியமனம் செய்யப்பட்ட அலுவலரிடம், திருமண்டல அலுவலகத்தை திறக்குமாறு கூறினர். அதற்கு அவர், பிஷப் வந்தால்தான் அலுவலகத்தை திறக்க முடியும் என்று கூறினார்.
இதனால் அங்கு இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுண் டிஎஸ்பி கணேஷ் தலைமையில் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். பின்னர் நாசரேத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டியை அங்கிருந்த ஒரு அறையில் வைத்து பூட்டி `சீல்’ வைத்தனர். தொடர்ந்து அனைவரையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் புதிய நிர்வாகிகள் அங்கிருந்த அறையில் மாலை வரை அமர்ந்து இருந்தனர். பின்னர் உபதலைவர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், அனைத்து தேர்தல்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கடந்த 20-10-2021 அன்று நடைபெற்ற தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பெருமன்ற நிர்வாகிகளுக்கான தேர்தலில் மேற்படி பெருமன்ற தேர்தலின் போது நடைபெற்ற முறைகே டுகள் வீடியோ ஆதாரத்துடன் கண்டறியப்பட்டதால் 20-10-2021 அன்று நடைபெற்ற அனைத்து தேர்தல்களும் ரத்து செய்யப்படுகிறது. மறு தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


