தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட ரூ.50லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி இனிக்கோ நகர் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் ராமசந்திரன் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதய ராஜகுமார் இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இன்று அதிகாலை 1.15 மணியளவில் இனிக்கோ நகர் கடற்கரைக்கு செல்லும் வழியில் இலங்கைக்கு படகுமூலம் கடத்துவதற்காக அசோக் லேலண்ட் தோஸ்த் லோடு வேனில் கொண்டுவரப்பட்ட சுமார் 35 கிலோ வீதம் 36 மூடைகளில் இருந்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. போலீசாரைக் கண்டதும் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 50 லட்சம் ஆகும். இதையடுத்து பீடி இலைகள் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை சுங்கத்துறை வசம் க்யூ பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


