தொழில் நகரமான தூத்துக்குடியை உலக அளவிற்கு உயர்த்துவதற்காக, “தூத்துக்குடியில் இருந்து உலகம்” என்ற தலைப்பில் 2 நாள் தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு மற்றும் அகில இந்திய தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு 2026 இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
மத்திய, மாநில அரசுகள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் புதிய ஸ்டார்ட்அப் திட்டங்களை ஊக்குவித்து வருகின்றன.அரசின் இத்திட்டங்களில் உள்ள வாய்ப்புகளைத் தொழில்முனைவோரும் இளைஞர்களும் அறிந்து கொள்ளும் வகையில், தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் இந்த 2 நாள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களின் அரங்குகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விளக்கும் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்மாநாட்டைத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர். அப்போது கனிமொழி எம்பி பேசியதாவது: “எதிர்காலம் தொழில்நுட்பத்தைச் சார்ந்ததாக மாறிக் கொண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்து வரும் நிலையில் நாம் இருக்கிறோம்.”
“உங்கள் முன்னால் இருக்கும் சவால்களை எதிர்கொள்ள நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். தொழில் முதலீடு என்பது மற்றவர்கள் யோசிப்பதற்கு முன்பே நீங்கள் யோசித்துச் செயல்படுத்துவதில்தான் இருக்கிறது. என்னால் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்’ என்ற நம்பிக்கையுடன் செயல்படுவதுதான் ஸ்டார்ட்அப்பின் முக்கிய நோக்கம். தொழிலில் வரும் சவால்களை எதிர்கொள்ள ‘எங்களால் முடியும்’ என்ற நம்பிக்கை வெற்றிக்கு அடித்தளமாக அமையும். புதியவர்கள் அதிக அளவில் தொழில்துறைக்கு வர வேண்டும்.” என்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஏஐசிசிஐ தலைவர் சங்கர் மாரிமுத்து, செயலாளர் சுரேஷ் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்! தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில், இளைஞர்கள் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள், முதலீடுகளை ஈர்க்கும் வழிகள் மற்றும் தொழில்நுட்பச் சவால்கள் குறித்து துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்தரங்குகள் நடைபெற்றன.


