
தூத்துக்குடியில் கல்லூரி பேராசிரியருக்கு வெளிநாட்டு எண் மூலம் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி அதன் மூலம் ரூபாய் 50,000/- பணத்தை ஆன்லைன் மோசடி யில் சம்மந்தப்பட்ட இருவர் கைது – கைது செய்த சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
தூத்துக்குடி ராஜகோபால் நகர் கீரீன்ஸ்வே காலனியைச் சேர்ந்த திருமதி. அமலா அருளரசி என்பவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார், இவரது கணவர் திரு. பீட்டர் அமலதாஸ் (58) என்பரும் மற்றொரு கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 12.07.2020 அன்று ஒரு வெளிநாட்டு வாட்ஸ் ஆப் எண்ணிலிருந்து அமலா அருளரசி செல்போனுக்கு ‘அமேசான் பே ஈ கிஃப்ட் கார்டு” (கினீணீக்ஷ்ஷீஸீ ஜீணீஹ் மீ – ரீவீயீt நீணீக்ஷீபீ) வாங்கி அனுப்புமாறு அவரது கல்லூரி முதல்வர் புகைப்படத்துடன் ஒரு ‘லிங்க்” கொடுக்கப்பட்டு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. அந்தக் குறுஞ்செய்தியை பார்த்துவிட்டு அவர் உடனே, தனது கல்லூரி முதல்வரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார், அப்போது முதல்வரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து வாட்ஸ் ஆப் செய்தி வந்த அதே எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த நபர், தான் மருத்துவமனையில் உள்ளதாகவும், தற்போது அவரை தொடர்பு கொள்ள வேண்டாம் என தகவல் அனுப்பியுள்ளார். மேலும் ‘அமேசான் பே ஈ கிஃப்ட் கார்டை” உடனடியாக வாங்கி, அவர் ஒரு மெயில் ஐ.டி கொடுத்து, அந்த மெயில் ஐ.டிக்கு உடனே அனுப்புமாறு மீண்டும், மீண்டும் செய்தி அனுப்பி அவசரப்படுத்தியுள்ளார். அதனால் கல்லூரி முதல்வருக்கு அவசரமாக தேவைப்படுகிறது போல நினைத்து, அமலா அருளரசி, மேற்படி வாட்ஸ் ஆப்பில் வந்த தகவலின்படி ‘அமேசான் பே ஈ கிஃப்ட் கார்டு” ரூபாய் 50,000/-க்கு வாங்கி, அவர் அனுப்பிய ’லிங்கிற்கு” அனுப்பி வைத்துள்ளார். மேலும் அதே நபர், அதே செல் எண்ணிலிருந்து மேலும் ரூபாய் 45,000/-க்கு ஒரு ’கூகுள் பே கிஃப்ட் கார்டு” வாங்கி குழந்தைகளுக்கு அன்பளிப்பாகஇன்னொரு மின் அஞ்சலுக்கு அனுப்புமாறு அமலா அருளரசியிடம் கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அமலா அருளரசி, தனது கல்லூரி முதல்வருக்கு மீண்டும் போன் செய்து மேற்படி நடந்த விபரங்களை கூறி கேட்டபோது, அவர் போனை எடுத்து நான் அப்படி எதுவும் வாங்கித் தரச் சொல்லவில்லை, அது போன்று நான் யாருக்கும் எந்த செய்தியும், எந்த லிங்க் ம் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து தன்னை மோசடி செய்யப்பட்டதையறிந்த மேற்படி அமலா அருளரசியின் கணவர் திரு. பீட்டர் அமலதாஸ் கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்களை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவின் பேரில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்கள் மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சுதாகர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில், ஈரோடு மாவட்டம், குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகளான முருகையன் மகன் மோகன்பாபு (26) மற்றும் பழனிச்சாமி மகன் சங்கர் (27) ஆகிய இருவரும், அமலா அருளரசியை செல்போனில் செய்தி அனுப்பி ஏமாற்றிய மர்ம நபரும் ‘பேக்ஸ்புல்.காம் என்ற ஒரு இணையதளத்தில் சர்வதேச அளவில் எளிதில் பணமாக மாற்றக்கூடிய ‘பிட் காயின் எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் என்பதும், அதன்படி அமலா அருளரசி மூலம் மோசடியாக பெற்ற ரூபாய் 50,000/-க்கான ‘கிஃப்ட் கார்டை” மேற்படி மர்ம நபர், இவர்கள் இருவருக்கும் ரூபாய் 30,000/-க்கு குறைந்த விலைக்கு கொடுத்துள்ளதும், அதற்கு இவர்கள் இருவரும், அந்த பண மதிப்பிற்குப் பதிலாக அவருக்கு ரூபாய் 30,000/-ம் மதிப்புள்ள டிஜிட்டல் பிட் காயினை இணையதளத்தின் மூலம் கொடுத்துள்ளதும், அதன் பிறகு அந்த மர்ம நபர் கொடுத்த ‘கிஃப்ட் கார்டை” இவர்கள் இருவரும் நகைக் கடைக்குச் சென்று ரூபாய் 50,000/-க்கு தங்கக் காசாக வாங்கி, அதை உடனே விற்று பணமாக மாற்றி மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. உடனே சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோகன்பாபு மற்றும் சங்கர் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்று வேண்டிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரை பயன்படுத்தி முகநூல், வாட்ஸ் ஆப் செய்தி, இணைதள இணைப்புகள் போன்றவற்றின் மூலம் அவசரமாக பணம் தேவைப்படுகிறது, உடனே அனுப்புங்கள் என உண்மைபோன்று பல்வேறு காரணங்களை கூறி பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்வதில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே பொது மக்கள் யாருக்காவது பண உதவி செய்வதாக இருந்தால், சம்மந்தப்பட்டவருக்குதான் பணத்தை அனுப்புகிறோமா என்று உறுதி செய்த பின்னரே அவர்களுக்கு அனுப்ப வேண்டும், ஆன் லைன் மூலம் ஏதாவது மோசடி நடைபெற்றால் உடனடியாக 155260 என்ற சைபர் குற்றப்பிரிவு கட்டணமில்லா தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்