பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் திறக்கப்பட்டு இன்றுடன் 50ஆண்டுகள் ஆகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலமாக விளங்கி வருகின்றது பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை. ஆங்கிலேயர்களை இந்திய மண்ணில், ஆரம்ப காலத்திலேயே எதிர்த்த சுதந்திரப் போராளிகளுள் ஒருவராக வீரபாண்டிய கட்டபொம்மன் கருதப்படுகிறார். அவரது வீரம் & தியாகத்தை சிறப்பிக்கும் பொருட்டு 1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை, அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் கட்டி திறக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஆக.17) பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுகோட்டை திறக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. வெள்ளையர்களால் தரைமட்டமாக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை மீண்டும் உருவாகி 50 ஆண்டு பிறந்தநாள் நினைவை பலரும் போற்றி வருகின்றனர். வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தை பறைசாற்றும் நினைவிடமாக திகழ்ந்து வரும் இக்கோட்டையை ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் பார்வையிட்டு வருகின்றனர்.


