தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 792 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து உயர் கல்வித்துறை, தொழில் நுட்ப கல்வி மூலம் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு பி.இ. பட்டப்படிப்பு படித்து வரும் செல்வி. ஆபர்ணா என்ற மாணவிக்கு உயர் கல்வி தொடரும் வகைக்கு முதலமைச்சரின் கல்வி உதவி தொகையாக ரூ.50,000/-க்கான வரைவோலையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண உதவித்திட்டத்தில் 8 கிராம் தங்க நாணயத்தை மாவட்ட ஆட்சியர் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் , மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலிக் கருவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய130 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


