கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனிப் பெருந்திருவிழாவில் நேற்று நடைபெற்ற தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் பங்குனித் திருவிழா கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 13-ஆம் தேதி (9-ம் நாள்) கோலாகலமாக நடைபெற்றது.
விழாவின் 10-ஆம் நாளான நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டும், தீர்த்தவாரியை முன்னிட்டும் அதிகாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி மற்றும் மூலவர்களுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
காலை 10:30 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. அஸ்திர தேவர் ஹோமம் மற்றும் புண்யாகவாசனம் முடிந்தபின், திருவாசகப் பொற்சுன்னம் பாடல்கள் பாடப் பாட உரலில் மஞ்சள் இடிக்கப்பட்டு சுவாமி, அம்மனுக்குச் சாத்தப்பட்டது.
பின்னர் சுவாமி மற்றும் அம்மன் வீதி உலாவாகக் கோவிலின் அகத்தியர் தெப்பத்தை வந்தடைந்தனர். அங்கு புனித நீர் நிலையின் கரையில் அஸ்திர தேவர் மற்றும் சுவாமி, அம்மனுக்குச் சிறப்புத் தீர்த்தவாரி நடைபெற்றது.
சித்திரை முதல் நாள் மற்றும் தீர்த்தவாரி ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகள் ஒரே நாளில் அமைந்ததால், அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இரவு சுவாமி மற்றும் அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இதனைத் தொடர்ந்து முறைப்படி கொடியிறக்கம் செய்யப்பட்டுத் திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.


