தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு பாரம்பரிய ‘பொன்னேர் பூட்டுதல்’ நிகழ்ச்சி நடைபெற்றது.
சித்திரை முதல் நாளில் மங்கலப் பணிகளைத் தொடங்குவது தமிழர்களின் மரபு. அந்த வகையில், உழவுத் தொழில் சிறப்பாக அமைய விவசாயிகள் சூரிய பகவானை வழிபட்டு, நிலத்தில் முதல் உழவைத் தொடங்குவதை ‘பொன்னேர் பூட்டுதல்’ என்பர். நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த மரபு இன்றும் மாறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி அருகேயுள்ள பொட்டலூரணியில், உழவர் அணியினர் இணைந்து இந்த நிகழ்வை நடத்தினர். உழவர் சண்முகம் தலைமையில் திரண்ட விவசாயிகள், முதலில் சூரிய வழிபாடு செய்தனர். கால மாற்றத்திற்கு ஏற்ப, நவீன முறையில் டிராக்டர்களைப் பயன்படுத்தி நிலத்தில் உழவு செய்து பொன்னேர் பூட்டுதல் நிகழ்வைத் தொடங்கினர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
விளாத்திகுளம் பகுதியில் அனைத்து ஏர் உழவன் விவசாயிகள் சங்கம் சார்பில் பாரம்பரியம் குறையாமல் காளைகள் மூலம் ஏர் பூட்டி உழவு செய்தனர். ஏர்க்கலப்பைக்கு மஞ்சள் பூசி, காளைகளைத் தயார் செய்து முறைப்படி வழிபாடு நடத்தி உழவுப் பணிகளைத் தொடங்கினர். இந்த நிகழ்வில் விவசாயிகள் பலர் திரளாகப் பங்கேற்றனர்.
புத்தாண்டின் முதல் நாளில் பூமித் தாயையும் சூரியனையும் வணங்கித் தொடங்கப்பட்ட இந்த உழவுப் பணி, இந்த ஆண்டு நல்ல மழையையும் செழிப்பான விளைச்சலையும் தரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


