துாத்துக்குடி மற்றும் கேரள மாநிலம் விழிஞம் துறைமுகங்களை இணைக்கும் வகையில், தனி ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் ஒன்றான துாத்துக்குடி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, நிலக்கரி, மரம் போன் றவற்றை இறக்குமதி செய்வதற்கும், சர்க்கரை, உப்பு, சிமென்ட் மற்றும் பிற கொள்கலன் சரக்குகளை இறக்குமதி செய்வதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த துறைமுகத்தில் தொடர்ந்து விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், விழிஞம் சர்வதேச துறைமுகம், கடந்த மே மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் ஆழமான துறை முகமாக அமைந்துள்ளது. பெரிய சரக்கு கப்பல்களை நிறுத்த இடமளிக்கும் வகையில், இந்த துறைமுகம் வடிவமைக் கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியாவின் உள்நாட்டு சரக்கு கப்பல் போக்குவரத்து தேவைக்கு தீர்வு அளிக்கும் வகையில், விழிஞம் துறைமுகம் உருவெடுத்துள்ளது. அதனால், தூத்துக்குடி- விழிஞம் துறைமு கங்களை இணைக்கும் வகையில், பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட ஆய்வு பணிகள் துவங்கி உள்ளன.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின், ‘கதி சக்தி’ திட்டத்தின் கீழ், முக்கிய நகரங்கள், துறைமுகங்களுக்கு ரயில் இணைப்பு வசதி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், -துாத்துக்குடி விழிஞம் துறைமுகங்கள் இடையே சரக்கு ரயில் போக்குவரத்துக்கு கூடுதல் வசதி அவசியமாகிறது.
தற்போதுள்ள நிலவரப்படி, கன்னியாகுமரி -திருவனந்தபுரம், 86 கி.மீ., இரட்டை ரயில் பாதையில், நாகர்கோவில் வரை பணிகள் முடிந்துள்ளன. அங்கிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை இணைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த ரயில் இணைப்பு, இந்த நிதி ஆண்டிற்குள் நிறைவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.
இந்த பாதை வரும்போது, இரு துறைமுகத்தையும் இணைக்கும் வகையில், ரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தனர்.


