தூத்துக்குடி-சென்னை இடையே வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே கோட்ட மேலாளருக்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் அனுப்பியுள்ள மனுவில், “தூத்துக்குடி -சென்னை சென்னை- தூத்துக்குடி இடையே ஆயுத பூஜை மற்றும் தீபாவளிக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கியமைக்கு எங்கள் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் வருகின்ற அக்டோபர் 4, 5 நாட்களில் தூத்துக்குடி சென்னை முத்து நகர் ரயிலில் 4ம் தேதி சனிக்கிழமை காத்திருப்பு பட்டியல் அனைத்து வகுப்பிலும் சுமார் 300க்கு மேல் காணப்படுகிறது.
அக்.5 ஞாயிற்றுக்கிழமை அன்று சுமார் வெயிட்டிங் லிஸ்ட் தற்போதைய 400க்கு மேல் உள்ளது. மேலும் இந்த நாட்களில் தட்கல் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட் அதிகமாக காணப்படும் சூழ்நிலை தான் இருக்கிறது. தசரா பண்டிகை காரணமாக சாதாரண பயணிகள் பெட்டிகளில் கூட்டமும் அதிகமாக நிரம்பி வழியும் சூழ்நிலைதான் உள்ளது. ஆதலால், தங்கள் நிர்வாகம் தயவு கூர்ந்து தூத்துக்குடி-சென்னை இடையே வரும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். நன்றி.


