பி.எம்.கிசான் திட்ட நிதி உதவி உட்பட வேளாண் சார்ந்த அனைத்து அரசு நலத்திட்டங்களையும் பெற விவசாயிகள் அடையாள எண் பெற வேண்டியது அவசியம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு வேளாண்மை துறை மூலமாக விவசாயிகள் அடையாள எண் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களிடம் பட்டா உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாய அடையாள எண் பெறுவதற்கான செயலியில் பதிவு செய்து வருகின்றனர்.
வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த அனைத்து அரசு உதவிகள் பி.எம்.கிசான் திட்ட நிதி உதவி பயிர் கடன், பயிர் காப்பீடு, உரமானியம் போன்ற விவசாயிகளுக்கான அனைத்து நலத்திட்டங்களையும் பெற விவசாய அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வேளாண்மை துறை மூலமாக விவசாயிகளின் நில உடமை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வேளாண் அடுக்ககம் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தனிக் குறியீடு எண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, விவசாயிகள் தங்களது ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், நில உடமை விபரங்கள் ஆகியவற்றுடன் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தையோ அல்லது பொது சேவை மையத்தில் கட்டணம் இன்றியோ பதிவு செய்து விவசாயிகள் அடையாள எண்ணை பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகள் அடையாள எண் பெறுவதற்கு இதுவே இறுதிவாய்ப்பாக உள்ளதால் விவசாயிகள் உடனடியாக அடையாளம் பெற்று பயனடைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
ஏற்கனவே, விவசாய அடையாள எண் பதிவு செய்துள்ள ஒரு சில விவசாயிகள் தங்களது நிலங்களில் ஒரு பட்டா எண் மட்டுமே பதிவு செய்து அடையாள எண் பெற்றுள்ளனர். உதாரணமாக ஒரு விவசாயிக்கு நான்கு பட்டா எண்கள் இருக்கும் பட்சத்தில் நான்கு பட்டா எண்கள் இருந்தும் அவர் ஒரு பட்டாவில் உள்ள நிலத்தினை மட்டுமே பதிவு செய்து விவசாயபதிவு எண் பெற்று இருக்கலாம். அவ்வாறு உள்ள விவசாயிகள் தங்களது மீதமுள்ள நிலங்களின் விபரங்களையும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மூலமாக பதிவு செய்திட வேண்டும் பட்டா எண்கள் விடுபட்ட விவசாயிகள் அவற்றை பதிவு செய்வதும் அவசியமாகும் அடையாள எண் பதிவு செய்தல் குறித்த கூடுதல் விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர்களை விவசாயிகள் அணுகி பயன் பெறலாம்.
விவசாய அடையாள என பெற்ற விவசாயிகள் ”நம்ம வயல்” செயலி மூலம் தனது வயலின் சாகுபடி விபரங்களை மின்னணு பயிர் கணக்கீட்டில் பதிவு செய்ய இயலும். இச்செயலில் ஆண்ட்ராய்டு செல்போனில் மட்டுமே செயல்படும். இச்செயலியின் மூலம் விவசாயிகள் தங்களது செல்போன் மூலம் மின்னணு பயிர் கணக்கெடுப்பை தன்னார்வலர்களாக மாறி தாங்களே மேற்கொள்ளலாம். அதன் மூலம் மின்னணு பயிர் கணக்கெடுப்பை விரைவில் முடிக்க உதவுவதோடு.
விவசாயி பதிவு எண்ணில் விடுபட்ட நிலங்களை விவசாயி கண்டறியலாம். விவசாயி செயலியில் உள் நுழைந்தவுடன் அவருடைய விவசாய அடையாள எண்ணில் இணைக்கப்பட்டுள்ள நிலங்கள் உட்பிரிவுகளை பார்க்க முடியும். இதன் மூலம் ஏதேனும் நிலம் அல்லது உட்பிரிவு விடுபட்டிருந்தால் விவசாயிக்கு உடனடியாக தெரியவரும். அவர் வேளாண்மை துறை மூலம் நில விபரங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


