தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வெள்ள நீர் தேங்குவதைத் தடுக்கும் பணிகள் மற்றும் மாநகராட்சி மத்தியக் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிரதான மழைநீர் வடிகால்கள், சிறு பாலங்கள் மற்றும் இயந்திரக் குழிகளுடன் கூடிய வடிகால்களில் தேங்கியுள்ள மணல் மற்றும் சகதிகளை அப்புறப்படுத்தும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
மழைநீரை அப்புறப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள மின் மற்றும் டீசல் மோட்டார்களின் இயக்க நிலை குறித்தும், மழைநீர் வெளியேற்றும் உந்து நிலையங்களின்செயல்பாடுகள் குறித்தும் ஆணையர் சரிபார்த்தார். தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட லயன்ஸ் டவுன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வெளியேற்றும் மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருப்பதை ஆணையர் நேரில் பார்வையிட்டார்.
அனைத்துப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்து, வரக்கூடிய மழைக்காலத்தைச் எதிர்கொள்ள எப்போதும் தயார் நிலையில் இருக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சியில் மத்திய ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு அமைப்பு மூலமாகக் கண்காணிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வரும் தெருவிளக்கு பராமரிப்புப் பணிகளையும் மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


