தூத்துக்குடி மாநகரில் விதிகளை மீறி போக்குவரத்துக்கு இடையூராக சாலையோரம் நிறுத்தப்படும் கார் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி நகர பகுதி வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் நெரிசல் மிகுந்த பகுதியாக விளங்குகிறது. குறிப்பாக பள்ளிகள் இயங்கி வரும் மேற்கு ரதவீதி, ரெங்கநாதபுரம், டூவிபுரம், சண்முகபுரம், பெருமாள்புரம், புதுக்கிராமம், சங்கராபுரம், தாமரோதர நகர் மெயின் ரோடு, பக்கிள்புரம் உள்ளிட்ட மாநகரின் முக்கிய சாலைகளில் விதிமுறைகளை மீறி சாலையோரம் கார்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடிய முக்கிய இடங்களில் ‘நோ பார்க்கிங்’ போர்டுகள் வைத்தும், விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவிலான வாகனங்கள் நகரை கடந்து செல்கின்றன. சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் பிற வாகனங்கள் சாலையை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பள்ளிக் குழந்தைகள் விபத்துக்குள்ளாகின்றனர்.
விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈட வேண்டும். மேலும், தொடர்கதையாக உள்ள இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை
“தூத்துக்குடியில், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். விதிகளை மீறி பள்ளிகள், கல்லூரிகள் அமைந்துள்ள குறுகிய சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ள நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையங்களில் நிறுத்தப்பட்டு ரூ.2ஆயிரம் வரை அபாரதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனை முருகன் தெரிவித்தார்.


