
தருவை கிராமமே எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என இருந்தது. நாங்கள் சென்ற (6.08.2024) சமயத்தில் கா ர்சாகுபடி நடந்து கொண்டிருந் தது. பெரும்பாலுமே ஜீன் மாதம் சாகுபடி துவங்கியிருக்க வேண்டும் ஆனால் இந்த வருடம் சற்று தாமதமாக கார் சாகுபடி துவங்கி ஆகஸ்ட் மாதம் நடந்து கொண் டிருக்கிறது. இந்தவருடம் தட்டுபாடு இல்லாமல் பாசனத் துக்கு அணையில் தண்ணீர் இருக்கிறது. எனவே விவசாயிகள் கவலை இல்லாமல் விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
எங்களை கூட்டிக்கொண்டு பெருமாள் அய்யா வரப்பு வழியாக முன்னால் நடக்க ஆரம்பித்தார். நாங்கள் அவர்கள் பின்னால் நடந்தோம். வழி நடப்பதற்கு நன்றாகத்தான் இருந்தது. இந்த வயல்வெளியை தருவை பத்து என்று கூறுகிறார்கள். ஏற்கனவே இதற்கு சற்று மேற்காக இருக்கும் வயல்வெளியை கைப்பத்து என்று நாம் கூறியிருந் தோம்.
இங்கு சுமார் 480 ஏக்கர் விளைநிலம் உள்ளது. ஒவ்வொரு இடமும் பள்ளம் பள்ளமாக உள்ளது. இறுதியில் அது பச்சையாற்று ஆலங்காலில் போய் விழுகிறது. தண்ணீர் மழை காலத்தில் தேங்கி விவசாயம் வீணாகி விடக்கூடாது என்பதற் காக இப்படி நமது முன்னோர்கள் வழி வகுத்து வைத்திருக்கிறார்கள். தற்போது நஞ்சை பயிருக்கு உரம் போடும் காலம் எனவே தண்ணீரை சிக்கனமாக வைத்து இருக்கிறாரக்ள். எனவே வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை.
தொடர்ந்து நடைபோடுகிறோம். ஒரிடத்தில் பனை மரத்தினால் ஆனா மடை இருந்தது. இதை பார்த்தவுடன் எனக்கு ஆச்சரியம். ஏன் என்றால் கான்கீரிட், கல் மடை போன்றவை அமையும் முன்பே இதுபோன்ற பனை மரத்தாலும், தழைகளாலும் தான் நமது முன்னோர்கள் விவசாயத் துக்கு மடை அமைத்து தண்ணீரை திருப்பியுள்ளார்கள். அதை மீண்டும் நினைவு படுத்தும் விதமாக ஒரிடத்தில் பனை மரத்தினால் ஆன மடை இருந்தது. அதை ரசித்துப் பார்த்துக் கொண்டே நடந்தோம்.
ஒரிடத்தில் விவசாயிகள் ரசாயண உரத்தினை சாக்கில் போட்டு விரவி வயலுக்கு போட ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். உர மூடையை பல கிலோ மீட்டர் நடந்தே கொண்டு வரும் விவசாயிகளை பாராட்டியே தீர வேண்டும். விவசாய கூலிகள் தட்டுபாடு. இதனால் பல வயற்வெளிகளில் தனியாக நின்று தங்கள் வயலில் தாங்களே களை பறித்துக் கொண்டிருந் தார்கள்.
அதை பார்த்தவுடன் செண்பராக ராமன் அய்யா சந்தோசமடைந்தார். தங்கள் விளைநிலத்தில் வேலை செய்தாலும், விவசாயம் செய்யும் இவர்கள்தான் நமது நாட்டில் பிரமாக்கள் என கூறி ஆனந்தம் அடைந்தார். ஏன் என்றால் இவர் தனது தோரணமலை சித்திரை திருவிழாவில் விவசாயிகளை அழைத்து கௌரவப்படுத்தி வருபவர். எனவே அவர் எங்கள் சித்தப்பா காலத்தில் எங்களை வயல்வெளிகளுக்கு கூட்டிச்சென்று காட்டுவார். நாம் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் விவசாயத்தை மறக்க கூடாது என்பார் என பெருமையாக பேசிக்கொண்டே எங்களுடன் வந்தார்.
தொடர்ந்து வரப்பு வழியே நடந்தோம். அங்கே அகலமான இடமொன்று வந்தது. ஒரு காலத்தில் இது மிகப்பெரிய சாலை. இந்த சாலை ஊருக்குள் வரை சென்றது. இந்த சாலை வழியாக தற்போது நாம் செல்லும் மண்டபத்துக்கு மாட்டு வண்டியில் வந்து விடலாம் என கூறிய பெருமாள் அய்யா தொடர்ந்து எங்களை அழைத்துக்கொண்டு சென்றார். எங்கள் வலது புறம் பச்சையாறு வந்து கொண்டிருந்து செடி கொடிகளிக்கிடையே ஓடிக்கொண்டிருந்தது. எங்கள் கண்ணுக்கு நதியின் காட்சி தெரியவில்லை. ஆனால் அது சலசல வென ஒடும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இந்த சமயத்தில் நாங்கள் அருகில் செல்ல முடியவில்லை. அப்படி செல்ல முயற்சித்தாலும் அதற்கான பாதை இல்லை.
இறுதியில் நாங்கள் நடந்தே தாமிரபரணி கரைக்கு வந்தோம். அதன் பின் ஆற்றுக்குள் இறங் கினோம். கொஞ்ச நாள்களுக்கு முன்பு வரை இந்த இடம் முள் அடர்ந்து காணப்பட்டது. இப்போது தான் ராட்சத இயந்திரம் கொண்டு இந்த முள் செடிகளையெல்ல்லாம் அப்புறப்படுத்தி வைத்திருக் கிறார்கள் என கூறினார். அங்கிருந்து நடந்து சிறிது தூரத்தில் உள்ள மண்டபத்தினை அடைந்தோம்.
அந்த மண்டபம் முழுவதும் மண்மூடிக்கிடந்தது. அதே வேளையில் அந்த பகுதியில் நிறைய கோரைப்புல்கள் காணப்பட்டது.
பத்தமடை பாய் முடைவதற்கு ஏற்ற கோரை புல் இங்கிருந்து தான் கொண்டுச்செல்கிறார்கள். குறிப்பாக நாம் பத்தமடை பாய் குறித்து அவ்வூருக்கு ஆய்வு சென்ற போது, பாய் தொழிலாளிகள் நாங்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் நரசிங்கநல்லூர் கருங்காடு பகுதியில் இருந்து தான் கோரைப்புல்லை கொண்டு வருவோம் என கூறியிருந்தார்கள்.
நரசிங்கநல்லூருக்கு தாமிரபரணி கரை கிடையாது. கருங்காட்டில் தாமிரபரணி கரை இருந்தாலும் அதிகமான தூரம் பாறைகளாகத்தான் காட்சியளிக்கும். அப்படியிருக்கும் போது கோபாலசமுத்திரத்திரம் தாண்டியவுடன், கருங்காடு தாமிரபரணி கரைக்கு எதிர்கரையில் தருவை தாமிரபரணி கரையில் தான் இந்த கோரைப்புல்கள் உள்ளது.
நான் பத்தமடையில் கோரைப்புல் தகவலை சொன்னார்கள் என்று சொன்னவுடன் எங்களுடன் வந்த பெருமாள் அய்யா அதை அமோதித்தார். இந்த கோரைத்தான் பத்தமடைக்கு கொண்டு செல்கிறார்கள். பத்தமடை பாயையே கோரைப்பாய் என்று தான் கூறுவார்கள் என்றார்.
இந்த இடத்தில் தாமிரபரணி மிகவும் குறுகலாக இருந்தது. எனவே இவ்விடத்தில் உள்ள செடிகளை அகற்றி சீர் செய்தால் தாமிரபரணி சுத்தமாகி விடும் என்று கூறினேன். அதற்கு உடனே மறுப்பு தெரிவித்தார் நிவேக். நாம் அழிக்க வேண்டியது. வெங்காய தாமரை மற்றும் நீர்கருவை போன்ற அந்நிய செடிகளை தான். கோரைப்புல் போன்ற செடிகளை அகற்ற கூடாது. காரணம் இந்த கோரைப்புல் தான் தாமிரபரணி பாதுகாவலன். பல நீர் ஊற்றுகள் உருவாக இது போன்ற புல் வெளிகளே காரணம். எனவே புல் வெளிகளை அகற்ற முயற்சி செய்யக்கூடாது. என்றார். உண்மைத்தான் பொதிகை மலை செல்லும் வழியில் மிகப்பெரிய புல்வெளிகள் உண்டு. இந்த புல்வெளிகள்தான் தாமிரபரணி வற்றாத ஜீவ நதியாக இருக்க காரணம் என வனத்துறையினர் என்னிடம் கூறியிருக்கிறார்கள்.
அவர் சொல்வது உண்மை என்பது போலவே இவ்வித்தில் ஒரு அபூர்வ நீர் ஊற்று உள்ளது. இந்த நீர் ஊற்று கோடையிலும் வயல்வெளிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் போது கூட சீராக நீர் சுரக்கிறது.
ஆகவே கல்மண்படத்தினை பார்க்கும் முன்பு இந்த நீர் ஊற்று குறித்து நாம் காணலாம்.
( நதி வற்றாமல் ஓடும்)