முன்கதைச் சுருக்கம்: சுதந்திரத்திற்கு முன்பு, திருச்செந்தூர் – உடன்குடி பகுதியில் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் மிகப்பிரம்மாண்டமாக நடந்தது. அப்போது காந்தியடிகளின் “செய் அல்லது செத்து மடி” என்ற கோஷம் இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்தச் சமயத்தில்தான் குலசேகரபட்டினம் உப்பளத்தில் லோன் துரை என்ற ஆங்கிலேய அதிகாரி நம் மக்களை அடிமைப்படுத்தி, அடக்குமுறைகளைக் கையாண்டான். இதைப் பொறுக்காத காங்கிரஸ் இளைஞர்கள் அவனைக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடினர். அவர்களைக் கண்டுபிடிக்க டெபுடி சூப்பரின்டென்டென்ட் ராவ் பகதூர் டி.எம். அப்பாத்துரை பிள்ளை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையில், கொலையாளிகளுக்கு உதவிய மேகநாதன் போலீசாரால் விரட்டப்படுகிறான். சித்தன்விளை பெரிய நாடார் இல்லத்தில் போலீசார் சோதனையிடுகிறார்கள்.
இனி…
சித்தன்விளை பெரிய நாடார் இல்லத்திற்குச் சென்றார் சப்-இன்ஸ்பெக்டர் இராமலிங்கம் பிள்ளை. அவரை ஒருவிதக் கேள்விக்குறியுடன் பார்த்தார் பெரிய நாடார்.
“ஐயா, என்ன சொல்றீங்க?”
“ஆமாம் நாடாரே… நீங்க கொஞ்சம் கவனமாக இருக்கணும்.”
“அதுக்கென்ன இப்போ?”
“லோன் துரை கொலையில் உங்களுக்குத் தொடர்பு இருக்குன்னு சொல்றாங்க. நீங்கதான் காங்கிரஸ்காரர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கீங்கன்னு போலீஸ் நினைக்குது.”
பெரிய நாடார் அமைதியாகிவிட்டார். போலீஸ் மோப்பம் பிடித்துவிட்டது! எப்படிப் பிடித்திருப்பார்கள்? 27 பேருக்குத் தலைவாழை இலை போட்டுச் சாப்பாடு போட்டோமே… நம்மைப் பிடிக்காதவர்கள் யாராவது நிச்சயம் போலீசிடம் சொல்லியிருப்பார்கள் என எண்ணினார்.
இராமலிங்கம் பிள்ளை தொடர்ந்தார்: “என்னைத்தான் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க நியமித்துள்ளார்கள்.”
பெரிய நாடார் மீண்டும் அமைதி காத்தார்.
“நீங்கள் லோன் துரையைக் கொலை செய்த காங்கிரஸ்காரர்களுக்கு நிச்சயம் அடைக்கலம் கொடுத்திருப்பீர்கள் என எனக்குத் தெரியும்.”
மீண்டும் அதே அமைதி. எப்படி ‘இல்லை’ என்று சொல்ல முடியும்? சொல்ல இயலாதே… நடப்பவை அனைத்துமே உண்மைதானே! பெரிய நாடார் சப்-இன்ஸ்பெக்டரை ஏறிட்டுப் பார்த்தார்.
“பெரிய நாடாரே, உங்களை நான் தவறாக நினைக்கவில்லை. நம் நாட்டை மீட்கப் போராடும் இளைஞர்களுக்கு நீங்கள் உதவியிருப்பீர்கள். அது சரிதான். ஆனால், அதற்கான சான்றுகள் எதையும் நீங்கள் வைத்திருக்காதீர்கள்.”
நாடார் தலையாட்டினார். ‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்பது போல் அவர் கண்கள் இருந்தன. அதற்கும் இராமலிங்கம் பிள்ளையே பதிலளித்தார்.
“மோசம் போய்விடாதீர்கள். கொலையாளிகள் உங்களிடம் விட்டுச் சென்ற துப்பாக்கிகளையும் ஆயுதங்களையும் பக்கத்திலுள்ள கோயில் கிணற்றில் போட்டுவிடுங்கள். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.”
பெரிய நாடார் ‘சரி’ எனத் தலையாட்டினார். கிளம்பும்போது இராமலிங்கம் பிள்ளை ஒரு எச்சரிக்கை விடுத்தார்: “பெரிய நாடாரே, இன்றிரவுக்குள் ஆயுதங்கள் மறைக்கப்பட்டிருக்க வேண்டும்.”
அடுத்த நிமிடம், பெரிய நாடார் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார்.
“நம்மை நம்பி வந்தவர்களைக் காப்பாற்ற வேண்டுமே… அதைச் செய்துவிட்டேன். லோன் துரை எனும் வெள்ளையனை அழிக்க வேண்டும் என நினைத்தோம், அதை என் அருமைப் போராட்டக்காரர்கள் முடித்துவிட்டார்கள். அவர்களுக்கு நான் உதவாமல் யார் உதவுவார்கள்? நன்றாக உபசரித்து, செலவுக்குப் பணமும் கொடுத்து அனுப்பி வைத்தேன். அது நிச்சயம் தவறல்ல. என் நாடு அந்நியனிடம் சிறைப்பட்டுக் கிடப்பதை நான் எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்?”
அதே வேளையில், நாமும் மாட்டிவிடக் கூடாது என்று எண்ணினார். மேகநாதனைப் போலவே, பெரிய நாடாரும் தாங்கள் வெளியே சுதந்திரமாக இருந்தால்தான் தியாகிகளைக் காப்பாற்ற இயலும் என்று கருதினார். அன்றிரவு முழுவதும் அவருக்குள் பெரும் மனப்போராட்டம்.
“இரவுக்குள் இந்த ஆயுதங்களைக் கடத்த வேண்டுமே… முடியுமா? கடத்தினால்தான் நாம் தப்பிக்க முடியும். நமக்குத் துரோகம் செய்ய ஒரு கும்பல் இருக்கத்தான் செய்யும். ஆனால், சான்றுகள் எதையும் மிச்சம் வைக்கக் கூடாது.”
இரவில் ஆட்களைத் திரட்டினால், யாராவது காட்டிக் கொடுத்துவிடுவார்கள் என்று அஞ்சிய அவர், தானே அனைத்து ஆயுதங்களையும் சுமந்து சென்று கோயில் கிணற்றில் போட முடிவு செய்தார். வயது முதிர்ந்தவர் என்றாலும் வைரம் பாய்ந்த கட்டை அவர் உடல்.
தன் குடோனில் இருந்த சாக்குப்பைகளை எடுத்து ஆயுதங்களை உள்ளே வைத்துத் தைத்தார். சுமார் 20 மூட்டை ஆயுதங்கள் இருந்தன. ஒவ்வொரு மூட்டையையும் நீண்ட கயிற்றால் கட்டினார். தோளில் சுமந்து ‘அய்யன் கோயில்’ கிணற்றை நோக்கி நடந்தார். அந்தக் கிணறு சற்று காட்டுப் பகுதியில் இருந்ததால் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.
அமாவாசை இருட்டு. தூரத்தில் தவளைகளின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. கிணறு ஆழமானது, சுமார் 20 அடியில் தண்ணீர் இருந்தது. ஆயுதங்களை நேரடியாகப் போட்டால் விழும் சத்தம் அக்கம் பக்கத்தாரை எழுப்பிவிடும்; ரோந்து வரும் போலீசாரின் காதிலும் விழுந்துவிடும்.
பதற்றத்துடன் இருந்த பெரிய நாடார், சாக்கு மூட்டையின் முனையில் கயிற்றைக் கட்டி மெதுவாகக் கிணற்றுக்குள் இறக்கினார். மூட்டை தண்ணீரைத் தொட்டவுடன் கயிற்றை உருவிவிட்டார். சத்தமே இல்லாமல் மூட்டைகள் கிணற்று அடிக்குச் சென்றன.
தனியாளாக 10 மூட்டைகளுக்கு மேல் சுமந்தபோது அவரால் நடக்க முடியவில்லை. எப்போதும் ஏவல் ஆட்களை வைத்து வேலை வாங்கியவருக்கு, இந்தச் சூழல் மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும் தளராமல் அதிகாலை 4 மணிக்குள் அத்தனை மூட்டைகளையும் கிணற்றுக்குள் சேர்த்துவிட்டு, சோர்வுடன் வீடு வந்து நிம்மதியாகத் தூங்கிவிட்டார்.
மறுநாள் காலை, சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கியது. ஏதோ நடக்கப் போகிறது என்ற அறிகுறி தென்பட்டது.
டெபுடி சூப்பரின்டென்டென்ட் ராவ் பகதூர் டி.எம். அப்பாத்துரை பிள்ளை கர்ஜித்துக் கொண்டிருந்தார்.
“27 பேர் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஊரில் யாரோ நிச்சயம் உதவி செய்கிறார்கள். அவர்களை ஏன் இன்னும் பிடிக்க முடியவில்லை?”
காவல்துறை அதிகாரிகள் அவர் முன் தலைகுனிந்து நின்றனர்.
“என்ன மேன்… ஓர் ஆங்கிலேய அதிகாரியைக் கொன்றிருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சி நடக்கும்போது கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லையா?”
இராமலிங்கம் பிள்ளைக்குத் தர்மசங்கடமாக இருந்தது. ஒருபுறம் அரசாங்கக் கடமை, மறுபுறம் நாட்டுப் பற்று. “பேசாமல் இந்தக் காக்கிச் சட்டையைக் கழற்றி வைத்துவிட்டுப் போராட்டத்தில் குதித்துவிடலாமா?” என்று கூட அவர் மனம் எண்ணியது.
ஆனால் அந்தச் காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்தவர்கள் என்ன ஆவார்கள் என்பது அவருக்குத் தெரியும். மருதநாயகத்தின் கதை அவருக்கு நினைவுக்கு வந்தது. ஆங்கிலேயப் படையில் சேர்ந்து பல வெற்றிகளைப் பெற்ற கான்சாகிப் (மருதநாயகம்), இறுதியில் அவர்களை எதிர்த்தபோது தூக்கிலிடப்பட்டான். அவன் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வெவ்வேறு இடங்களில் புதைக்கப்பட்டது. “உடனிருந்து எதிர்ப்பவர்களை அவர்கள் சும்மா விடுவார்களா? நாம் சாதாரண சப்-இன்ஸ்பெக்டர். எனவே, இப்போதைக்கு இவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதே நல்லது. அதே சமயம் நம் ரத்த சொந்தங்களைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாது” என்று உறுதி பூண்டார்.
அப்பாத்துரை பிள்ளை அவரிடம் வந்தார். “என்ன யோசனை? நீர் உள்ளூர்க்காரர்தானே… உமக்கு அவர்களைத் தெரியாதா?”
“எஜமான், எனக்கு அவர்கள் இருக்கும் இடம் தெரியும்” என்றார் இராமலிங்கம் பிள்ளை. அனைவரும் அதிர்ந்தனர். அவர் காட்டிக் கொடுத்துவிடுவார் என்று அனைவரும் நினைத்தபோது, லாவகமாகப் பேசினார்: “எஜமான், அவர்கள் அந்தத் தேரிக்காட்டுக்குள் சென்றுவிட்டார்கள். நாம் அங்கே போய் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது. அவர்களாக வெளியே வந்தால்தான் உண்டு.”
அப்பாத்துரை பிள்ளை அதை ஆமோதித்தார். தேரிக்காடு என்பது சாதாரண இடமல்ல; அது ஒரு மணல் பாலைவனம். காற்று அடித்தால் மணல் மேடுகள் இடம் மாறும், பாதையே தெரியாது. உள்ளூர் மக்களே தேவாலய விளக்குகளின் வெளிச்சத்தை வைத்துத்தான் வழி கண்டுபிடிப்பார்கள். அங்கு ஒளிந்திருப்பவர்களைப் பிடிப்பது கடினம்.

இருந்தாலும், அவர்கள் சாப்பிடுவதற்கு யாராவது அரிசி, பருப்பு கொண்டு செல்ல வேண்டுமே? அவர்கள் முதலில் எங்கே சென்றார்கள்? அப்பாத்துரை பிள்ளையின் விசாரணை சித்தன்விளை பெரிய நாடாரை நோக்கித் திரும்பியது.
பெரிய நாடார் வீட்டில் போலீஸ் படை குவிந்தது. தூக்கிக் கொண்டிருந்த நாடார், தன் வீட்டு வாசலில் நின்ற படையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தேரிக்காட்டுக்குள் ஒளிந்திருந்த காங்கிரஸ்காரர்களிடையே உரையாடல் நிகழ்ந்தது. பெஞ்சமின் எச்சரித்தார்: “யாரும் தனியாகப் போய் மாட்டிக் கொள்ளாதீர்கள். போலீஸ் கையில் சிக்கினால் சின்னாபின்னமாக்கிவிடுவார்கள்.”
“எத்தனை நாள் இப்படித் தேரிக்குள் ஒளிந்திருப்பது?” – இது காசிராஜன். “இது நம் பூமி. நாமே இப்படி ஒளிந்து கிடப்பது வேதனையாக இருக்கிறது” – இது ராஜகோபால்.
“மாட்டிக்கொண்டால் நமக்கு மரண தண்டனை நிச்சயம். சிறிது காலம் பொறுத்திருப்போம். பரங்கியர்கள் இந்த மண்ணை விட்டு வெளியேறும் காலம் நெருங்கிவிட்டது” என்றார் பெஞ்சமின்.

“ஆனால் பசி தாங்காதே… உணவு கொண்டு வருபவர்களைப் பின்தொடர்ந்து போலீசார் வந்தால் என்ன செய்வது?” என்ற கேள்வி எழ, “எதிர்த்து நிற்போம்!” என்றனர்.
“லோன் துரையை அழித்தது நியாயம். ஆனால் காவல்துறையில் இருப்பவர்கள் நம் சொந்தங்கள், அவர்களை எப்படித் தாக்குவது?” என்ற தயக்கம் அவர்களுக்குள் இருந்தது. மேகநாதனும், பெரிய நாடாரும் தங்களுக்காக வெளியே போராடுவதை நினைத்து அவர்கள் நெகிழ்ந்தனர்.
மாரி என்பவர் கண்ணீர் வடித்தபடி நின்றார். “நம்மை அடித்தால் பரவாயில்லை, நம் வயதான தாய், தந்தையரை அடிக்கிறார்களே… அவர்கள் என்ன செய்வார்கள்?”
தங்கள் குடும்பத்தினரைக் காப்பாற்ற சரணடைந்துவிடலாமா என்ற எண்ணம் எழுந்தபோது, “சரணடைவதா? அது நடக்காது!” என்று மற்றவர்கள் உறுதியாக நின்றனர்.
சித்தன்விளையில் அப்பாத்துரை பிள்ளை கோபமாகக் கேட்டார்: “எங்கே அவர்களை ஒளித்து வைத்திருக்கிறாய்?”
“யாரை?”
“லோன் துரையைக் கொன்ற அந்தக் களவாணிப் பயல்களைத்தான்!”
“எனக்குத் தெரியாது.”

அப்பாத்துரை பிள்ளை கையை ஓங்கியபோது, இராமலிங்கம் பிள்ளை தடுத்தார். “எஜமான், இவர் ஊரில் பெரிய மனிதர். அடித்தால் பெரிய பிரச்சனையாகிவிடும்.”
“சரி, ஆயுதங்களை எங்கே ஒளித்திருக்கிறாய்?”
பெரிய நாடார் அசைந்து கொடுக்கவில்லை. “நான் அவர்களை யாரென்றே தெரியாது என்று சொல்லும்போது, ஆயுதங்களைப்பற்றி எனக்கு எப்படித் தெரியும்?” என்றார்.
“பொய் சொல்லாதீர் நாடாரே! அன்று இரவு உங்கள் வீட்டில் அவர்களுக்கு விருந்து வைத்தது எங்களுக்குத் தெரியும்.”
“விருந்து வைத்ததை உங்களால் நிரூபிக்க முடியுமா?” – நாடார் துணிச்சலாகக் கேட்டார். சாட்சி சொல்ல யாரும் வரமாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும்.
அப்பாத்துரை பிள்ளை போலீசாருக்கு உத்தரவிட்டார்: “ஒரு மைல் தொலைவுக்குள் இருக்கும் எல்லாக் கிணறுகளையும், மண் தோண்டப்பட்ட இடங்களையும் சோதனையிடுங்கள்.”
எல்லாக் கிணறுகளிலும் போலீசார் குதித்துத் தேடினர். கடைசியாக அவர்கள் சென்றது ‘அய்யன் கோயில் கிணறு’. அது மிகவும் ஆழமானது என்பதால் தயங்கினர். இராமலிங்கம் பிள்ளைக்கும், பெரிய நாடாருக்கும் இதயம் படபடத்தது. அங்கே ஒரு கத்தி உறை கிடப்பதைக் கண்டுவிட்ட அப்பாத்துரை பிள்ளை, “ஆயுதங்கள் இங்கேதான் இருக்கின்றன. மோட்டாரைக் கொண்டு வந்து தண்ணீரை இறைக்கச் சொல்லுங்கள்” என்று உத்தரவிட்டார்.
20 மோட்டார்கள் மூலம் தண்ணீர் இறைக்கப்பட்டது. கிணறு வற்றியபோது, உள்ளே கிடந்த 20 மூட்டை ஆயுதங்களும் வெளிப்பட்டன. அவற்றை மாட்டு வண்டியில் ஏற்றி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
மீண்டும் விசாரணை. “பெரிய நாடாரே, ஆயுதங்களைப் பிடித்துவிட்டோம். நீங்கள்தான் போட்டீர்கள்.”
“இல்லை சார், நான் போடவில்லை.”
“அன்று இரவு அவர்களுக்கு உணவு போட்டீர்களா?”
“ஊர் பையன்கள் வந்தார்கள், சாப்பாடு போட்டேன். அவர்கள் கொலை செய்தார்களா என்று எனக்குத் தெரியாது.”
“அவர்களுக்குப் புதுத்துணி வாங்கிக் கொடுத்திருக்கிறீர்களே?”
“யார் வந்தாலும் சாப்பாடு போட்டுத் துணி கொடுப்பது எங்கள் வழக்கம். அவ்வளவுதான்.”
போதுமான ஆதாரங்கள் இல்லாததால், சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
திருச்செந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி வழக்கைக் கூர்ந்து கவனித்தார். அவர் அப்பாத்துரை பிள்ளையைப் பார்த்துச் சொன்னார்: “டெபுடி சூப்பரின்டென்டென்ட் அவர்களே, முதலில் தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடியுங்கள். மற்றவர்கள் உதவி செய்தார்கள் என்று அலைந்து உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க விடாதீர்கள். பெரிய நாடார் உள்ளூர்க்காரர் என்ற முறையில் உணவு கொடுத்திருக்கிறார், அதற்காக அவருக்குத் தண்டனை கொடுக்க முடியாது.”
பெரிய நாடாரைப் போலீஸ் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதி அவரை விடுதலை செய்தார். பெரிய நாடார் வெளியே வந்தார். ஆனால், அவர் மனம் அமைதியடையவில்லை. அதே சமயம், கொலையாளிகள் தேரிக்காட்டுக்குள் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
(குலசேகரபட்டினம் கொலை வழக்கு தொடரும்…)


