தூத்துக்குடி அண்ணாநகர் 8-வது தெருவில் உள்ள ஒரு மருந்தகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினரின் உடனடி நடவடிக்கையால் தீ மற்ற கடைகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் இயங்கி வரும் மருந்தகம் ஒன்றில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்தவுடன் மாவட்ட அலுவலர் கருணாகரன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீணை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் இந்தச் சமயோசித நடவடிக்கையினால், அருகில் இருந்த மற்ற வணிக நிறுவனங்களுக்குத் தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தீ விபத்தின் போது ஏற்பட்ட புகைமூட்டம் மற்றும் தீயணைப்புப் பணிகளால், அண்ணாநகர் – வி.வி.டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


