நெல்லை- திருச்செந்தூர் இடையே உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் 2 நிமிடம் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில பயணியர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நெல்லை-திருச்செந்தூர் இடையே பாசஞ்சர் ரயில்கள், எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் என பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நெல்லை- திருச்செந்தூர் இடையே பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம். ஆழ்வார்திருநகரி, நாசரேத், கச்சனாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்கள் 1 நிமிடம் மட்டுமே நின்று செல்கிறது.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் ரயிலில் அவசர, அவசரமாக ஏறி இறங்க வேண்டியுள்ளது. இதனால் ரயில் பயணிகள் அடிக்கடி தங்களுடைய உடைமைகளை தவறவிட்டு விடுகின்றனர். மேலும் பயணிகள் வாசலில் ஒருவருக்கொருவர் நெறித்து தள்ளிக்கொண்டு அவசரமாக இறங்க வேண்டியுள்ளது.
இதுகுறித்து மாநில பயணிகள் நலச்சங்க தலைவர் சாந்தகுமார் கூறுகையில், நெல்லை-திருச்செந்தூர் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் 1 நிமிடம் மட்டுமே ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இதனால் பயணிகள், மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், வயதானோர், ஊனமுற்றோர், கர்ப்பிணிகள் ஏறி இறங்க மிகவும் சிரமப்படுவதோடு பல இன்னல்களுக்கு ஆளாகி விடுகின்றனர். கூட்ட நெரிசல் நேரங்களில் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே பயணிகள், பொது மக்கள் நலன் கருதி நெல்லை- திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் ரயில்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் 2 நிமிடமாவது நின்று சென்றால் பயனுள்ளதாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட தென்னக இரயில்வே அதிகாரிகள் அனைத்து ரயில் நிலையத்திலும் குறைந்த பட்சம் 2 நிமிடமாவது ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


