தூத்துக்குடி – திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில், லாரிகளில் ஜல்லிக் கற்கள் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆபத்தான முறையில் கொண்டு செல்லப்படுவதால், கடுமையான விபத்துகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
தூத்துக்குடி – திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் பேருந்துகள் பயணித்து வருகின்றன. இந்தச் சூழலில், இப்பாதையில் இயக்கப்படும் சில டாரஸ் கனரக லாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் உயரத்தில் ஜல்லிக் கற்கள் மற்றும் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன.
இவ்வாறு கொண்டு செல்லப்படும் போது, லாரிகளின் மேல் பகுதியில் தார்ப்பாய் போர்த்தி முழுமையாக மூட வேண்டும் என்பது கட்டாய அரசு விதியாகும். ஆனால், பெரும்பாலான லாரிகள் எவ்வித தார்ப்பாய் மூடுதலும் இன்றி, முற்றிலும் திறந்த நிலையில் ஜல்லிக் கற்களை ஏற்றிச் செல்கின்றன. லாரிகள் நான்கு வழிச்சாலையில் அதிவேகமாகச் செல்லும்போது, காற்றில் ஜல்லிக் கற்கள் பின்னோக்கிப் பறந்து வந்து விழுகின்றன.
இதனால், அந்த லாரிகளுக்குப் பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கார்களின் முகப்பு கண்ணாடிகள் மீது கற்கள் மோதி உடையும் விபரீதம் தொடர்கதையாகி வருகிறது. திடீரென கற்கள் பறந்து வந்து முகத்தில் விழுவதால் நிலைதடுமாறி இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயமடையும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. கனரக லாரிகளின் இந்த அத்துமீறிய அசுர வேகமும் அலட்சியமும், ஒட்டுமொத்த நான்கு வழிச்சாலையையும் விபத்துக் மண்டலமாக மாற்றி வருவதாகப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் உடனடியாக இந்த நான்கு வழிச்சாலைப் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. விதிகளுக்குப் புறம்பாக தார்ப்பாய் போர்த்தாமல் ஜல்லிக் கற்களை ஏற்றி வரும் லாரிகளைப் பறிமுதல் செய்வதோடு, அவற்றின் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி – நெல்லை மாவட்ட வாகன ஓட்டிகள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.


