தூத்துக்குடியில், தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன், தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்களான எலுச்சூரி ரத்னாகர ராவ், (விளாத்திகுளம் / தூத்துக்குடி), சோடிங்புயீ, (திருச்செந்தூர் / திருவைகுண்டம்), அரவிந்த் குமார் வெர்மா, (ஓட்டப்பிடாரம் / கோவில்பட்டி) ஆகியோர் நடத்தினர்.
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால் 15-3-2026 அன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 243 கவனிக்கத்தக்க வாக்குச் சாவடிகள் 3 கூர்நோக்கக்கூடிய வாக்குச் சாவடிகள் மொத்தம் 246 பதற்றமான வாக்குச் சாவடிகள் 203 இடங்களில் அமைந்துள்ளன. இவற்றில் பணிபுரிந்திட மொத்தம் 244 நுண்பார்வையாளர்கள் கணினி தற்செயல்முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், நுண்பார்வையாளர்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் மற்றும் மேலாளர், மாவட்ட தொழில் மையம் சொர்ணலதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஷீலா, தேர்தல் வட்டாட்சியர் தில்லைபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்


