தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு தேவி ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் வெகுவிமர்சையாக நடைபெற்றன.
ஆடி மாத சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு அதிகாலையிலேயே திருக்கோவில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிரசித்தி பெற்ற காளியம்மனுக்குப் பால், இளநீர், மஞ்சள், சந்தனம், குங்குமம், திருநீறு, தயிர் உட்பட 21 வகையான நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இத்திருக்கோவில் மகாகவி பாரதியார் நேரில் வந்து மனமுருகி வணங்கிய சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும். பாரதியாரின் புகழ்பெற்ற பாடலான “காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்” என்ற பாடலை இந்த அருள்மிகு தேவி ஸ்ரீ காளியம்மன் கோவிலில் வைத்துத்தான் இயற்றினார் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.
ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாட்டில் எட்டையபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு, விளக்கேற்றி மனமுருகி சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்குச் சிறப்புப் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.


