
இதுவரை..
குவைத் செல்ல என்னால் இயலவில்லை. காரணம் எனது உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் குவைத் செல்ல டிக்கெட் விசா கிடைத்தும் கடைசி நேரத்தில் பயணம் ரத்து ஆகி விட்டது. ஆனாலும் முனைவர் சுதாகர் அவர்கள் குவைத் சென்று வந்த வரலாற்றை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
இனி.
ஈராக்கு ஏன் குவைத் மீது இப்படி தாக்குதல் நடத்தவேண்டும். இதற்கான விடையையும் டாக்டர் சுதாகர் தனது பதிவில் கூறியிருந்தார்.
அதன் விவரத்தினை மிகச் சுருக்கமாக கூறுவோம். ஏன் என்றால் நாம் குவைத் பயணத்தில் இதை பற்றி நிறைய பேசவுள்ளோம். முனைவர் சுதாகர் கூறும்போது, “ஈராக்கிலும் நிறைய எண்ணைக் கிடைக்கிறது. ஆனால் வியாபாரம் செய்வதற்கு, ஈராக்கிற்குக் கடற்கரை இல்லை. அதனால் ஈராக்கால் அதிகமாக எண்ணை விற்பனையில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. குவைத்தை ஆக்கிரமித்தால் ஈராக்கிற்குக் கடற்கரை கிடைத்தது விடும். எண்ணை விற்பனையில் அதீத ஆதிக்கம் செலுத்தலாம். அதனால்தான் குவைத்தை கைப்பற்ற இந்த சண்டை மற்றும் தீவைப்பு சம்பவங்கள் ஈடேறியது”. என அவர் அந்த முகநூல் பதிவில் கூறியிருந்தார். அதைப்பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. அதற்கெல்லாம் குவைத் செல்லவேண்டும். தற்போது நமக்கு குவைத் செல்ல வாய்ப்பு இல்லாமல் இருக்கிறதே.
ஆதங்கம் ஒரு புறம் இருந்தாலும் டாக்டர் சுதாகர் அய்யா அவர்களின் குவைத் பயணத்தினை படித்துக்கொண்டே இருந்தேன்.
அவர் ஒரு அருங்காட்சியகத்துக்கு சென்று, அந்த அருங்காட்சியகம் குறித்து மிகச்சிறப்பாக எழுதியிருந்தார்.
திண்ணை வைத்து வீடு கட்டும் பண்பில் ஒரு சீரிய சேவை மனப்பான்மை உண்டு. தற்காலத்தில் இது முற்றிலும் மறைந்து விட்டதாகவே தோன்றுகிறது.
வழிப் போக்கர்கள் இளைப்பாற இந்த திண்ணையை வைத்து வீடு கட்டினார்கள். தமிழகமெங்கும் இந்த வகை வீடுகள் நிறைந்து காணப்பட்டன.
இன்று அருகிலேயே யாரும் வரமுடியாதபடி வீட்டைச் சுற்றி சுவர் எழுப்பி வருகிறோம். பண்டைய குவைத்திலும் தமிழகத்தைப் போல் திண்ணையை வைத்து வீடு கட்டியுள்ளனர். இதனை இந்த நாட்டின் அருங்காட்சி யகத்தில் பார்த்தேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது என எழுதியிருந்தார்.
இந்த திண்ணை வீடுகள் தமிழகத்துடன் குவைத் நீண்டகால தொடர்பில் இருப்பதையும் அறியமுடிந்தது. என தமிழகத்துக்கும் குவைத்திற்குமான தொடர்ப்பை எழுதியிருந்தார். டாக்டர் சுதாகர் குவைத் சென்ற வேளையில் அவசரமாக ஊருக்கு வரவேண்டிய சூழ்நிலை இருந்தது. எனவே அவர் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்க கூட்டத்தில் தன்னுடைய சொற்பொழிவை முடித்து விட்டு, அவர்களின் அன்பான விருந் தோம்பலில் திளைத்து விட்டு நாடு திருப்பி விட்டார்.
நாடு திரும்பி இரண்டு நாளில் என்னை எனது இல்லத்தில் வந்து சந்தித்தார். என்னை நலம் விசாரித்து விட்டு நிச்சயம் ஒரு நாள் உங்களை மீண்டும் குவைத் கூட்டி ச்செல்வேன் என்று கூறினார். எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. காரணம் கிராமத்து எழுத்தாளர் ஒருவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்ற முனைப்பு முனைவர் சுதாகர் அவர்களுக்கு இருக்கிறதே. இதுபோன்ற மனப்பான்மை யாருக்குத்தான் வரும். எனவே அவரை எப்போதுமே நன்றியோடு நினைத்துப்பார்ப்பேன்.
இதற்கிடையில் குறைந்தது 6 மாதம் வெளிநாட்டு பயணம் போக கூடாது என மருத்துவர்கள் என்னிடம் கூறிவந்தனர்.
ஆனால் எனது மனைவியோ இனிமேல் விமானத்திலேயே நீங்கள் ஏறக்கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டார். இனி வெளிநாட்டு பயணம் அவ்வளவு தான் என முடிவு செய்துவிட்டேன். பயண ஏற்பாடு இருந்தாலும் கூட வீட்டில் விட மாட்டார்கள் என உறுதியாகி விட்டது. அவர்களிடம் இதய நோயுக்கும் விமான பயணத்துக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என கூறினாலும் கேட்பதாக தெரியவில்லை. இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என வேதனையில் இருந்தேன்.
ஆனால் காலம் வேறு மாதிரி வேலை செய்தது. நான் நன்கு உடல் நிலை தேறினேன். ஆண்டவன் எனக்கு விமான பயணம் ஒன்றை ஏற்பாடு செய்து தந்தார். அந்த பயணம் உள்ளூர் விமான பயணம்.
என்னுடைய மாமா மாயாண்டி அவர்கள் மும்பை பாண்டூப் பகுதியில் வசித்து வருகிறார். சிறந்த இலக்கிய வாதி. அதோடு மட்டுமல்லாமல் தாயத்தினை நேசிக்கக் கூடியவர். சொந்த ஊரை எப்போதுமே போற்றுவார். ஒருநாள் என்னிடம் “மருமகனே மும்பையில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் நடத்தும் அற்புத நிகழ்ச்சி ஒன்றுள்ளது. நீ. தான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவேண்டும்” என்றார். எனக்கு தர்மசங்கடம் ஒரளவு உடல்நிலை தேறி, இங்கே பல பணிகளை நான் பார்த்துக்கொண்டிருந்த நேரமது. “மாமா நிறைய வேலை எனக்கு இருக்கிறது. தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி இருக்கிறது. அதில் என்னை மாவட்ட ஆட்சி தலைவர் ஒரு உறுப்பினராக நியமனம் செய்துள்ளார். சித்திரை 1 ந்தேதி தோரண மலை முருகனுக்காக நான் எழுதிய பாடல் ஒன்று அரங்கேற உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் அய்யா 15 பேருக்கு விருது வழங்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைந்து இருந்தார். அந்த வேளையில் நான் கண்டிப்பாக இங்கே இருந்தே ஆக வேண்டும். இப்படி இருக்கும் போது மும்பை வந்தால் 1 வாரம் ஆகி விடுமே” என்றேன். “மருமகனே மும்பையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை விமானத்தில் டிக்கெட் புக் செய்து விடுகிறோம். மறுநாள் காலையில் திரும்பி வரவும் விமானத்தில் டிக்கெட் புக் செய்துவிடுகிறோம். நீங்கள் கிளம்பி வர மட்டும் ஏற்பாடு செய்யுங்கள்” என்றார்.
இதற்கு முன்பு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவினை துவக்கி வைக்க மாமா அழைத்திருந்தார். அப்போதும் மாமா விமானத்தில் பயணிக்க ஏற்பாடு செய்திருந்தார். டிக்கெட் எல்லாம் எடுத்து எனக்கு அனுப்பி வைத்து விட்டார். ஆனால் கொரோனா தொற்று நோய் காரணமாக அந்த வாய்ப்பு கை நழுவி போய் விட்டது. கடந்த செப்டம்பர் மாதம் குவைத் தமிழ்ச் சங்கத்தில் பேசுவதற்கு விமான டிக்கெட் எடுத்தும் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அந்த பயணமும் ரத்து. எனவே மனமுடைந்து போய் இருந்தேன். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விட்டதே என மனதுடைந்து போய் இருந்தேன்.
எனவே இந்த மும்பை பயணத்திற்கு நான் வீட்டில் என் மனைவியிடம் கேட்காமலேயே சரி என தலையசைத்து விட்டேன். இதய நோயாளி விமானத்தில் ஏறக்கூடாது என மருத்து குழுவினர் எச்சரித்த காரணத்தினால் என் மனைவி மிகவும் பயத்தில் இருந்தார். ஆகவேதான் யாரிடமும் சொல்லாமமல் பயணத்துக்கு தயாராகி விட்டேன். எனக்கு தன்னம்பிக்கை இருந்தது. நமக்கு எதுவுமே நடக்காத என நினைத்திருந்தேன்.
தற்போது மூன்றாவது முறையாக மும்பை செந்தூர் தமிழாய்வு அறக்கட்டளை சார்பாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விமான டிக்கெட் தாயாராகி விட்டது. இரண்டு நாள் பயணம். மும்பை செல்ல தாயராகி விட்டேன்.
14.04.2023
முதல் நாள் விமான பயணம் என்றவுடன் என்னை பரபரப்பு ஒட்டிக்கொண்டது. அதிகாலை 3 மணிக்கெல்லாம் செய்துங்கநல்லூரில் இருந்து கிளம்ப ஆயத்தமானேன். ஆனால் 2 மணிக்கு இடியுடன் கூடிய மின்னல், மழை பெய்தது. என்னடா தீடீர் என்று தடங்கள் என நினைத்தேன். “இறைவா இரவு நேரத்தில் எப்படி நெல்லை செல்ல, காரை வெளியே எடுத்து விடலாமா?” என கூட எண்ணினேன். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. சரியாக 3 மணி அளவில் போனால் போகுது என எனக்காக மழை சிறிது நேரம் நின்றது. சிறிய தூறல் மட்டுமே. அதில் நனைந்து கொண்டே, என்னை எனது மகன் அபிஷ் விக்னேஷ் மோட்டார் சைக்கிளிலில் புது பஸ்ஸாடாண்டில் கொண்டு விட்டார். அவரிடம் கூட நான் மும்பை செல்கிறேன் என கூறவில்லை. மதுரையில் ஒரு நாள் வேலை. நாளை வந்து விடுவேன் என்று கூறிவிட்டு மோட்டார் பைக்கில் இருந்து இறங்கினேன். அங்கே தயாராக மதுரை பஸ் நின்றது. ஓடிப்போய் ஏறினேன். தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருதுக்காக அரசு இலவச பஸ் பாஸ் எனக்கு கொடுத்திருந்தார்கள். ஆகேவ அந்த இலவச பஸ் பாஸை பயன்படுத்தி, நடத்துனரிடம் இலவச அனுமதி பெற்று சீட்டில் அமர்ந்தேன். பேருந்து வேகமாக கிளம்பியது.
மனதுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. இதுவரை என் மனைவியிடமோ, மகன் மகளிடமோ நான் செல்லும் இடம் எது என்று சொல்லித்தான் பயணம் செய்வேன். முதல் முதல் விமான பயணம். இதை கூட சந்தோசமாக சொல்ல இயலவில்லை. பொய் சொல்லி விட்டு பயணம் செய்கிறேன். விமான பயணம் என சொல்லியிருந்தால் என் மனைவி ஆர்ப்பாட்டம் செய்து பயணத்தினை நிறுத்திவிடுவார் என்ற பயமும் இருந்தது.
ஆனாலும் ஆவல். விமான பயணம் இரண்டு தடவை கையை விட்டு நழுவி போகிறதே என ஆதங்கம். எனவேதான் சொல்லாமலேயே பயணத்தினை மேற்கொண்டேன். சரியாக 7 மணிக்கெல்லாம் மதுரை -ஏர்போர்ட் விலக்கில் என்னை பேருந்தில் இருந்து இறக்கி விட்டார்கள். நானும் மற்றொரு நண்பரும் 150 ரூபாய் வாடகைக்கு ஒரு ஆட்டோவை அமர்த்திக்கொண்டோம். விமான நிலையத்தில் கொண் டுபோய் அந்த ஆட்டோ எங்களை விட்டது. 9 மணிக்கு தான் எனக்கு மும்பை விமானம். ஆகவே காலை டிபனை அங்குள்ள சிற்றுண்டி கடையில் முடித்து விட்டு ஏர்போர்ட் உள்ளே சென்றேன். எல்லாமே எனக்கு புதிதாக இருந்தது. உள்ளே புகுந்தவுடன் தமிழ் பேசுபவர்கள் யாரும் கண்ணில் படவில்லை. தமிழ் வளர்த்த மதுரையில் அனைத்து மாநிலத்துக்காரர்களும் அங்கே நின்று கொண்டிருந்தனர். ஆங்கிலமும் இந்தியும் தான் பேசினார்கள். கண்ணை கட்டி காட்டில் விட்டது போலவே உணர்ந்தேன். உள்ளே சென்ற உடன் எங்களது உடமைகள் ஆய்வு செய்யப்பட்டது. எனக்கு தெரிந்த இந்தியில் பேசி டிக்கெட்டை உறுதி செய்தேன். அதற்கு அங்குள்ள காவலர் எனக்கு உதவினார்.
அதன் பின் அங்கிருந்து மாடிக்கு நகரும் படிக்கட்டு வழியாக மேலே ஏறினேன். அங்கு மீண்டும் செக்கப். நமது பெல்ட், போன், மற்றும் மெட்டல் பொருள்களை தனியாக எடுத்து ஆய்வுக்கு வைத்தோம். தனிப்பட்ட முறையில் நம்மை நன்றாக ஆய்வு செய்தார்கள். அதன் பின் உள்ளே சென்றேன். மாயாண்டி மாமாவுக்கு செய்துங்கநல்லூரில் இருந்து அல்வா வாங்கி வைத்திருந்தேன். அந்த பார்சல் மீது அங்கிருந்த பாதுகாவலருக்கு சந்தேகம் வந்தது. அந்த பார்சலை வெளியே எடுத்து ஆய்வு செய்தார். அல்வா என்றவுடன் சிரித்துக் கொண்டே அனுப்பி வைத்தார். 7 கிலோவுக்குள் இருந்த காரணத்தினால் லக்கேஜ்யை கையிலேயே எடுத்துக் கொண்டேன். டிக்கெட்டையும் ஆதார் அட்டையையும் வைத்து மீண்டும் ஆய்வு செய்து நம்மை மேலே அனுப்பி வைத்தார்கள். அதன் பின் விமானத்துக்குள் அனுப்பப் பட்டோம்.
27 சி சீட் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. சன்னலுக்கு அடுத்த சீட். உள்ளே நுழையும் போதே விமான பணிப்பெண்கள் எங்களை புன்முறுவலுடன் வரவேற்றார். நான் அமர்ந்து இருந்த இடத்தில் தான் அவசர வழி இருந்தது. அந்த இடத்தில் ஒரு பணி பெண் அமர்ந்து விமானிக்கு வயர்லஸ் மூலமாக தகவல் கொடுத்துக் கொண்டிருந்தார். குறிப்பிட்ட நேரத்தில் ஆங்கிலத்தில் எங்களுக்கு பல தகவல்களை விமான பணிபெண் அறிவித்தார். தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் விமானம் ஓடுதளத்தில் ஓடியது. அதன் பின் திரும்பி மும்பையை நோக்கி, வானத்தில் ஏறியது. எல்லோரும் நிறைய பயம் காட்டியிருந்தார்கள். சத்தம் அதிகமாகும். காதில் பஞ்சு வைத்து அடைக்க வேண்டும் என்றெல்லாம் கூறியிருந்தார்கள். தலை சுற்றும் கவனமாக இருக்கவேண்டும் என்றெல்லாம் கூறியிருந்தார்கள். ஆனால் அதற்கு எந்தவொரு தேவையும் இல்லாமல் இன்டிகோ விமானம், சுமார் 300 பயணிகளுடன் வானத்தில் பறந்தது. மதுரை மாநகரம் சிறு சிறு புள்ளிகளாக கரைந்து, மேக கூட்டத்துக்குள் எங்கள் விமானம் புகுந்தது.
பணி பெண் தண்ணீர் கொடுத்தார். வேறு எதுவும் வேண்டுமா என கேட்டார். இங்கு விற்கும் பொருள்கள் விலை அதிகமாக இருக்கும் என கூறியிருந்தார்கள். மேலும் நாம் என்ன சின்ன குழந்தையா, தின்பண்டம் வாங்கி சாப்பிட. அமைதியாக சன்னல் வழியே வெளியே தெரியும் மேகக்கூட்டங்களை ரசித்துக்கொண்டே இருந்தேன். எனக்கு நான் பொதிகை மலை உச்சிக்கு நடைபயணமாக சென்ற போது மேக கூட்டத்தின் உள்ளே புகுந்து மேலே ஏறிய அந்த நாள்கள் நினைவுக்கு வந்தது. ஆனால் அது இயற்கை நமக்கு கொடுத்த பெரும் வரம். ஆனால் இங்கே உள்ளே ஏ.சி காத்து, வெளியே வெயில் என்பதால் பொதிகை மலை பயணத்தை இந்த விமானப்பயணத்தோடு ஒப்பிடவே முடியாது. பொதிகை மலை பயணம் சொர்க்கப்புரிக்குள் நடந்து செல்லும் ஆனந்தம். இதுவோ அப்படியல்ல?.
மதுரையில் விமானம் ஏறி சரியாக 1.45 மணி நேரம் கடந்தது. பணிப்பெண் அனைவரையும் மீண்டும் சீட் பெல்டை கட்டச்சொன்னார். விமானம் தரையை நோக்கி இறங்க ஆரம்பித்தது. தூரத்தில் மலை மேடுகளாக தெரிந்து அதன் பின் மிகப்பெரிய கட்டிடங்கள் தெரிய ஆரம்பித்தது. அந்த கட்டித்தின் உச்சியில் பிரமாண்டம் தெரிய , அதை விட அதிகமாக குடிசைகளும் தெரிந்தது. மும்பையில் தாராவி தான் மிகப்பெரிய சேரி என்று நினைத்திருந்தேன். மேலிருந்து பார்க்கும் போது மும்பையில் மிக அதிகமான சேரிகள் இருக்கும் போல. கிட்டத்தட்ட 15 நிமிடங்களில் மும்பை டெர்மினல் &2 விமான நிலையத்தில் ( அந்தேரி) விமானம் இறங்கி விட்டது.
மதுரை விமான நிலையத்தினை ஒப்பிடும் போது பல மடங்கு பெரியதாக இருந்தது. சுமார் 30க்கு மேற்பட்ட விமானங்கள் அங்கும் இங்கும் நின்று கொண்டிருந்தது. ஒரு புறம் பறக்க தயாராக இருக்கும் விமானம், சில இடங்களில் பறக்கும் விமானம். சில இடங்களில் இறங்கும் விமானம். மற்றொரு இடத்தில் தரையிறங்கி ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருக்கும் விமானம் என பாளை பஸ் நிலையத்தில் நிமிடத்துக்கு ஒரு பேருந்து வந்து செல்வது போலவே இங்கு விமானங்கள் வந்து சென்று கொண்டிருந்தது. விமானம் ஓடுதளத்தில் சென்று குறிப்பிட்ட இடத்தில் நின்றது.
மக்கள் வேகமாக இறங்க வசதியாக பின்பக்கத்தில் மற்றுமொரு நகரும் ஏணி கொண்டு வந்து அதன் மூலமாகவும் பயணிகளை இறக்கினார்கள். இன்டிகோ கம்பேனியின் பேருந்தில் ஏற்றி ஏர்போர்ட் வெளியே கொண்டு வந்தனர். லக்கேஜ் அதிகமாக இருந்தவர்கள் லக்கேஜ்யை எடுக்க சென்று விட்டார்கள். நான் கையில் இருந்த லக்கேஜ் உடன் நகரும் படி வழியாக மேலே ஏறி வெளியே வந்தேன். அங்கே உள்ள பவுண்டன் அருகில் நின்று கொண்டு மாயாண்டி மாமாவுக்கு போன் செய்தேன்.
மாமா என்னை அங்கேயே நிற்க சொன்னார். எல்லோரும் பரபரப்பாய் நின்றனர். நான் நின்ற மாடி 6 வது மாடி. 10 மாடிக்கு கூட நேராக வாகனங்கள் வந்து செல்ல வசதி உண்டு. அந்த வழியாகத்தான் நாம் விமானம் ஏற வரவேண்டும். லிப்ட்டில் 4 வது மாடிக்கு சென்றால் அங்கிருந்து ஆட்டோ பிடித்து வீட்டுக்கு சென்று விடலாமாம். (மேலே சொன்ன மாடி, லிப்ட் கணக்கு கூட எனக்கு அப்போது தெரியவில்லை. மறு நாள் வரும் போது பார்த்ததை வைத்து தான் பேசுகிறேன்) தற்போது மும்பை விமான நிலையத்தில் நான் நிற்கும் இடத்தினை பற்றி எதுவுமே புரியவில்லை. நான் நிற்கும் இடம் மாமாவுக்கு சரியாக தெரியவில்லை. இதனால் சுமார் அரைமணி நேரம் திக்கு தெரியாத காட்டில் நிற்பது போலவே இருந்தது.
மும்பையில் எனக்கு பயம் எதுவும் இல்லை. ஏன் என்றால் நான் கொஞ்ச நாள் மும்பையில் வசித்தேன். அப்போது எனக்கு கொஞ்சம் கொஞ்சம் இந்தி தெரியும். எனவே அதை வைத்து நான் வெளியே வந்து விடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது.
ஆனால் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. மாமா மாயாண்டி அவர்களும், எழுத்தாளர் செந்தூர் நாகராஜன் அவர்களும் என்னை தூரத்தில் இருந்து பார்த்து விட்டார்கள். கையை காட்டி சந்தோசத்தினை வெளிப்படுத்தினார்கள். அதன் பின் என் அருகில் வந்து எனக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
ஒரு காலத்தில் படித்து விட்டு வேலை இல்லாமல் வேலை தேடி மும்பை வந்து கூலி வேலை பார்த்தவன். இன்று ஒரு எழுத்தாளனாய் அங்கிகரிக்கப்பட்டு மும்பை ஏர்போர்ட்டில் வரவேற்பு பெறுகிறேன் என்ற போது என் கண்களில் ஆனந்த கண்ணீர் வடிந்தது.
மாமா “என்ன?” என்று கேட்டார்.
“இல்லை தூசி” என கண்ணை துடைத்துக்கொண்டேன்.
மும்பை மண்ணில் இந்த தாமிரபரணி எழுத்தாளனுக்கு வரவேற்பு. மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றேன்.
( தொடர்ந்து பயணிப்போம்)