குறிப்பன்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்வு. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பலி.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த ராம்குமார். இவர் நாசரேத் அருகே குறிப்பன்குளத்தை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் பேன்ஸி ரகப்பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. நேற்று ஒரு கட்டிடத்தில் நாசரேத் அருகே அரசர்குளத்தைச் சேர்ந்த கள்ளவாண்டான் மகன் முத்துகண்ணன்(21), கமுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் விஜய்(25), புளியங்குளத்தைச் சேர்ந்தவேலுச்சாமி மகன் நாராயணபெருமாள்(26), செம்பூரைச் சேர்ந்த சுந்தரம் மகன் பிரசாந்த்(26), சின்னமதிகூடலைச் சேர்ந்த செந்தூர்கனி, முத்துமாரி ஆகிய 6 தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் இருந்தனர்.
இவர்கள் இருந்த அறைக்கு அருகே உள்ள அறையில் மாலை 5.30 மணியில் திடீரென பட்டாசுகள் வெடித்தன. இதில் இருந்த வந்த தீப்பொறிகள் விழுந்து, தொழிலாளர்கள் பணியாற்றிய அறையில் இருந்த பட்டாசுகளும் வெடிக்க தொடங்கின. இதிலிருந்து தொழிலாளர்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த விபத்தில், அறையில் பணியில் இருந்து முத்துகண்ணன், விஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நாராயண பெருமாள், பிரசாந்த், செந்தூர்கனி, முத்துமாரி ஆகியோர் காயமடைந்தனர்.
இதில், காயமடைந்த பிரசாந்த், நாராயணபெருமாள் ஆகியோர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், செந்தூர்கனி, முத்துமாரி ஆகியோர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஏற்கனவே இந்த வெடி விபத்தில் விஜய் மற்றும் முத்து கண்ணன் ஆகியோர் உயிரிழந்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புளியங்குளத்தை சேர்ந்த வேலுச்சாமி மகன் நாராயண பெருமாளும் இன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.


