கொற்கையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வு பணியில் 2000 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டதால் ஆய்வாளர்களும், சமூக ஆர்வலர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
தமிழக தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் தொல்லியல் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. கொற்கை அகழாய்வு பணியைப் பொறுத்தவரை 75 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தாண்டு மீண்டும் இந்த அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி 26ம் தேதி தொடங்கிய இந்த அகழாய்வு பணி தொடர்ந்து 4 மாத காலமாக நடைபெற்று வருகிறது. இதற்காகக் கொற்கை ஊரின் மையப்பகுதியில் 17 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வு இயக்குநர் தங்கதுரை தலைமையில் இந்த அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
அகழாய்வு பணியில் பழமையான பொருட்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் இந்த அகழாய்வு பணியில் திரவப்பொருட்கள் வடிகட்டும் 4 அடுக்கு கொண்ட சுடுமண் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் மற்றொரு குழியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்தில் பயன்படுத்திய 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டது ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து அதே குழியில் இரும்பு உருக்கு, கண்ணாடி மணிகள், வாழ்விட பகுதிகளை உறுதிப்படுத்தும் தொழிற்சாலைகள் இருந்ததற்கான அமைப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டதால் தொல்லியல் ஆய்வுப்பணிகள் சூடுபிடித்துள்ளது. இந்த தொல்லியல் ஆய்வுப்பணிகள் செப்டம்பர் மாத இறுதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


