சோனியா காந்தி (பிறப்பு: 9 டிசம்பர் 1946) என்பவர் இத்தாலி வம்சாவளியைச் சேர்ந்த ஓர் இந்தியப் பெண் அரசியல்வாதி ஆவார். இவர் ராஜீவ் காந்தியுடனான திருமணத்தின் மூலம் நேரு-காந்தி குடும்பத்தில் உறுப்பினரானார். இவர் இந்திய தேசியக் காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். தன் கணவரின் படுகொலை நிகழ்ந்து ஏழு ஆண்டுகள் கழித்து 1998ஆம் ஆண்டு அக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து 10 ஆண்டுகள் அப்பொறுப்பை வகித்து வந்தார். அதன் பிறகு அவர் மகன் ராகுல் காந்தியை கட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். எனினும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற பொறுப்பில் சோனியா காந்தி நீடித்து வருகிறார்.
இந்திய அரசியலில் செல்வாக்கு மிகுந்த நபர்களில் ஒருவரான இவர், 2004ல் போர்பஸ் பத்திரிகையால் உலகில் மிகச் சக்திவாய்ந்த பெண்மணிகளில் 3வது இடத்திலும் 2007ல் அந்தப் பட்டியலின் தரவரிசையில் 6வது இடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும் டைம் பத்திரிகையும் இவரை 2007 2008ம் ஆண்டு உலகில் உள்ள அதிகச் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராகத் திகழ்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இத்தாலி நாட்டின் வெனிடோ என்ற பிரதேசத்தில் 30 கிலோ மீட்டர் தொலைவில் விசென்ஸாவில், உள்ள லூசியானா எனும் ஒரு சிறு கிராமத்தில் ஸ்டெஃபனோ மற்றும் பாவ்லோ மையினோ ஆகியோருக்கு மகளாக பிறந்தார். டுரின் என்ற நகருக்கு அருகில் உள்ள ஆர்பாஸனோவில் பாரம்பரிய ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் வளர்ந்த அவர் தன் இளமைப் பருவத்தை ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் பயின்று கழித்தார். ஒரு கட்டிட ஒப்பந்தக்காரரான அவர் தந்தை, 1983ல் மரணமடைந்தார். அவரது அன்னையும் மற்றும் இரு சகோதரிகளும் இன்றும் ஆர்பாஸனோவில் வசித்து வருகின்றனர்.
1964ல், கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள பெல் கல்வி அறக்கட்டளையின் மொழிப் பள்ளியில் அவர் ஆங்கிலம் கற்கச் சென்றார். அப்போது அவர் கிரேக்க உணவகத்தில் பகுதிநேரமாக பணியாற்றி வந்தார். அந்த உணவகத்தில் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் சேரப் பதிவுசெய்திருந்த ராஜீவ் காந்தியை 1965ல் சந்தித்தார். பிறகு இருவரும் 1968ல் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர், அதைத்தொடர்ந்து சோனியா காந்தி தனது மாமியாரும் அப்போதைய பிரதமருமான இந்திரா காந்தியின் இல்லத்திற்குச் சென்று வாழத் தொடங்கினார்.
ராஜீவ்-சோனியா இணைக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி என்று இரு பிள்ளைகள் பிறந்தனர். செல்வாக்கு மிக்க நேரு குடும்பத்தைச் சார்ந்திருந்த போதிலும் ராஜீவ் ஒரு விமானியாக பணிபுரிந்து கொண்டிருந்த வேளையில் சோனியா தன் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பணியை மேற்கொண்டார்.
1980 சூன் 23ல் தனது இளைய சகோதரர் சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்தமையால் ராஜீவ் காந்தி 1982ல் அரசியலில் கால்பதிக்க நேர்ந்தது. எனினும் சோனியா காந்தி பொதுவாழ்வில் இருந்து விலகியே இருந்தார்.
பொதுவாழ்வில் சோனியா காந்தியின் ஈடுபாடு அவரது மாமியார் படுகொலைக்குப் பிறகும் மற்றும் அவரது கணவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுமே தொடங்கியது. பிரதமரின் மனைவியாக அவரது அதிகாரப் பூர்வ உபசரணியாக அவர் செயல்பட்டார் மற்றும் ஏராளமான தேசிய நிகழ்வுகளில் அவர் உடன் சென்றார். 1984ல், அமேதியில் நடந்த தேர்தலில் ராஜீவை எதிர்த்து அவரது தம்பியின் மனைவியான மேனகா காந்தி போட்டியிட்டார். அப்போது சோனியா தனது கணவருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் களமிறங்கினார்.
அவரது கணவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டப் பிறகு அவர் பிரதம மந்திரியாக மறுத்தமையால், காங்கிரஸ் கட்சியானது பி.வி நரசிம்மராவை தலைவராகவும் தொடர்ந்து பிரதம மந்திரியாகவும் தேர்வு செய்தது. எனினும், அடுத்த சில வருடங்களுக்கு, காங்கிரஸின் எதிர்காலம் ஊசலாட்டம் காணவே 1996 தேர்தல்களில் அது தோல்வி கண்டது.
மாதவராவ் சிந்தியா, ராஜேஷ் பைலட், நாராயண் தத் திவாரி, அர்ஜுன் சிங், மம்தா பானர்ஜி, ஜி. கே. மூப்பனார், ப. சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் போன்ற பல்வேறு மூத்தத் தலைவர்கள், அப்போதைய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து வந்த பி. வி. நரசிம்ம ராவ் மற்றும் சீதாராம் கேசரி ஆகியோரை வெளிப்படையாக எதிர்த்து கட்சியை விட்டு வெளியேறியதால், காங்கிரஸ் கட்சி பல பிரிவுகளாகச் சிதறியது.
கட்சியின் தொய்வுற்ற எதிர்கால நிலைகளை புதுப்பிக்க வேண்டி, 1997ல் கல்கத்தா வருடாந்திரக் கூட்டத்தில் சோனியா காந்தி காங்கிரஸ் அடிப்படை உறுப்பினராகி அடுத்த ஆண்டு 1998ல் அதன் கட்சித் தலைவரானார்.
அடிப்படை உறுப்பினராக 62 நாட்கள் ஆகியதும், அவரையே கட்சியின் அவைத்தலைவராக்க வலியுறுத்தப்பட்டது. அவர் மக்களவைத் தேர்தல்களில் கர்நாடகாவில் பெல்லாரிமற்றும் 1999ல் உத்திரப் பிரதேசத்தில் அமேதி ஆகிய இடங்களில் போட்டியிடலானார், பெல்லாரியில் பாஜகவின் அனுபவமிக்கத் தலைவர், சுஷ்மா சுவராஜைத், தோற்கடித்தார். 2004, 2009-ல் அவர் உத்தரப்பிரதேசத்தில் ரே பரேலியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1999ல் பதின்மூன்றாவது மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக ஏற்படுத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி, அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு இருந்த போது அவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். அப்பொறுப்பில், அவர் தேஜகூ அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் 2003ல் கொண்டுவந்தார். அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பத்து வருடங்கள் தொடர்ந்து பதவி வகித்தவர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
2004 பொதுத்தேர்தல்களில், சோனியா காந்தி நாடுதழுவிய பிரசாரம் செய்த போது ஆம் ஆத்மி (சாதாரண மனிதன்) என்ற முழக்கத்தை பாஜக எழுப்பிய ‘இந்தியா மிளிர்கின்றது’ என்ற முழக்கத்திற்கு எதிரிடையாக எழுப்பினார்.
அப்பொழுது அவர் பாஜவிடம் “யாருக்காக இந்தியா மிளிர்கின்றது?” என்று வினவினார். அத்தேர்தலில், அவர் உத்திரப்பிரதேசத்தில் ரே பரேலி தொகுதியில் இருந்து பெரும்வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேஜகூவின் தோல்வியைத் தொடர்ந்து, சோனியா காந்தி தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. மே 16ஆம் நாள், இடதுசாரிகளின் ஆதரவுடன் 15-கட்சிகளின் கூட்டணி அரசாங்கத்தை நடத்த அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அதைத் தொடர்ந்து அவ்வரசாங்கம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற பெயரிடப்பட்டது.
தேர்தலுக்குப் பின்னர், தோற்ற தேஜகூ அவரை ‘அந்நியப் பிறப்பு’ என்று எதிர்த்து கிளர்ச்சி செய்தது. மேலும் மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ், சோனியா காந்தி பிரதமரானால், தலையை மொட்டை அடித்துக் கொள்வதாக அச்சுறுத்தியோடு இல்லாமல் “தரையில் படுத்துறங்குவேன்” என்றும் கூறினார்.[ அவர் பிரதம மந்திரி பதவிக்கு நிற்க பல சட்டப்பூர்வமான காரணங்கள் தடையாக இருந்ததாக தேஜகூ வாதிட்டது. குறிப்பாக, 1955 இந்திய குடி உரிமைச் சட்டத்தின் ஐந்தாம் பிரிவை சுட்டிக்காட்டினர். இறுதியில் அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்த இந்திய உச்ச நீதிமன்றம் சோனியா காந்தி பிரதமராக சட்டப்படி எந்தத் தடையுமில்லை என தீர்ப்பு வழங்கியது.
ஒரு சில நாட்களுக்குப் பின்னர், சோனியா காந்தி மக்களவையில் காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்தார். பெருவாரியான இந்திய மக்கள் அவரது நிலையை பழமையான இந்தியப் பாரம்பரியமான முடிதுறத்தலுக்கு ஒப்பிட்டனர், ஆனால் அதேசமயம் எதிர்க்கட்சியினர் அது ஒரு அரசியல் தந்திரம் என்று சாடினர்.
மே 18ஆம் நாளன்று, அவர் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநரான டாக்டர். மன்மோகன் சிங் பெயரை பிரதமர் பதவிக்காகப் பரிந்துரைத்தார்.
மார்ச் மாதம் 23 ஆம் நாள், சோனியா காந்தி தனது மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் மற்றும் தேசிய ஆலோசனைக் குழவின் மன்றத்தலைவர் பதவிப்பொறுப்பிலிருந்தும் விலகினார். லாப-நோக்குடைய அந்த தேசிய ஆலோசனைக் குழுவின் தலைமைப்பதவியில் அவருக்கு விலக்கு அளிக்கப்படப்போகிறது என்ற யூகத்திற்காக அப்படி செய்தார்.
2006 மே மாதம் நிகழ்ந்த ரே பரேலி நாடாளுமன்றத் தொகுதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட சோனியா காந்தி பெரும் வாக்கு வித்தியாசத்தில் அதாவது 4,00,000 ஓட்டுக்களில் வெற்றிபெற்றார்.
தேசிய ஆலோசனைக் குழுவின் கூட்டத்தலைவர் மற்றும் ஐமுகூவின் தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருந்த போது அவர் தேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகிய இரண்டையும் கொண்டுவர வேண்டி முக்கியப் பங்காற்றினார். 2007 ஜூலை 15 ஆம் நாள் ஐ.நா.சபை கொணர்ந்த தீர்மானத்தின் படி அவ்வாண்டு அக்டோபர் 2 ஆம்நாள், அதாவது மகாத்மா காந்தியின் பிறந்தநாளை சர்வதேச அகிம்சை தினம் என்று அனுசரித்த வேளையில் அவர் ஐ.நா சபையில் உரையாற்றினார்.
அவரது தலைமையின் கீழ், இந்தியாவில் மறுபடியும் காங்கிரஸ்-ஏற்படுத்திய-ஐமுகூ 2009 பொதுத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மைக்கு குறைவான இடங்களில் வெற்றி பெற்றது. 206 மக்களவை இடங்களில் வென்றதே, எண்ணிக்கை அளவில் 1991லிருந்து காங்கிரஸ் பெற்ற அதிகபட்ச இடங்கள் ஆகும். பிறகு மற்ற கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியில் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றார். 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரசு கட்சி 44 இடங்களில் மட்டுமே வென்று வரலாறு காணாத படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் எதிர்க்கட்சி என்ற மதிப்பையும் பெற இயலாமல் போனது.
17 ஆவது மக்கவளை தேர்தலில் ரே பரேலியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 534918 வாக்குகளும் அடுத்து வந்த பாசகவின் தினேசு பிரதாப் சிங் 367740 வாக்குகளும் பெற்றனர்.
சோனியா காந்தியின் தலைமை குறித்து தொடக்கத்தில், காங்கிரசு கட்சிக்குள்ளேயே விமர்சனம் எழுந்தது. 1999ல் மே மாதம், மூன்று மூத்த கட்சித்தலைவர்களான (ஷரத் பவார், பூர்ணோ ஏ. சங்மா, மற்றும் தாரிக் அன்வர்) அவர் வெளிநாட்டில் பிறந்தவர் என்பதை சுட்டிக்காட்டி இந்தியப் பிரதமர் ஆகும் அவரது தகுதியை கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளிக்க வேண்டி, அவர் கட்சித்தலைவர் பதவியிலிருந்தே விலக முன்வந்தார் எனினும், அதன் விளைவாக மக்கள் ஆதரவு பெருகியது. அதைத்தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மூன்று கருத்து வேறுபாட்டாளர்களும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்க நேர்ந்தது.
சோனியா காந்தி தனது பிள்ளைகளையும் பிற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் எளிமையான பழக்க வழக்கங்கள் மேற்கொள்ள வலியுறுத்தினார், அதற்கு முன்னுதாரணமாக அவர் 2009 செப்டம்பர் மாதம் 14 ஆம்நாள் புதுடெல்லியில் இருந்து மும்பைக்கு சிக்கன வகுப்பில் விமானப்பயணம் செய்தார். அதனால் அவர் ரூ 10,000 மிச்சப்படுத்தினார். எம்.பி.க்களின் ஊதியத்திலிருந்து (ஒரு எம்.பியின் மாத ஊதியம் ரூ 16000) 20 சதவிகிதத்தை இந்தியாவில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டோர்களுக்கு நிதியுதவியாக வழங்க வலியுறுத்தினார்


