கடந்த 4 மாதங்களாக முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, பூசனூர் கிராம மக்கள் விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் பூசனூர் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதி பொதுமக்களுக்கு வைப்பார் ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட போர்வெல் மூலமாகக் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கிராமத்திலுள்ள மொத்தம் 5 குடிநீர் டேங்குகளில் 4 டேங்குகளுக்குத் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டும் கடந்த 4 மாதங்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், விளாத்திகுளம் யூனியன் அலுவலகம் முன்பாக அமர்ந்து முறையான குடிநீர் விநியோகம் வழங்கக் கோரி மனு அளித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்துத் தகவலறிந்து வந்த அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தடையின்றி விரைவாகக் குடிநீர் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் கலைந்து சென்றனர்.


