தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ‘விக்சித் பாரத் யுவா கனெக்ட்’ நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களிடம் காணொளி வாயிலாகக் கலந்துரையாடவுள்ளார்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சி குறித்து ‘மை பாரத் கேந்திரா’ மாவட்ட அலுவலர் மதுமிதா மற்றும் காமராஜ் கல்லூரி முதல்வர் கே. பானுமதி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது : புகழ்பெற்ற ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்த் பிறந்த தினமான ஆகஸ்ட் 29-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இளைஞர்களின் பங்கேற்பு மற்றும் தேசக் கட்டுமானத்தை ஊக்குவிக்கும் வகையில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி நாடு முழுவதும் 1,600 இடங்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் சுமார் 8 லட்சம் இளைஞர்கள் பங்கெடுக்க உள்ளனர்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வில், கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எடுத்துக்காட்டி பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். மேலும் இளைஞர்களின் கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கேட்கும் கலந்துரையாடலும் நடைபெறுகிறது.
விளையாட்டுத் துறையில் உள்ள வாய்ப்புகள், தங்களை எவ்வாறு மேம்படுத்திக் கொள்வது மற்றும் இந்தியாவை விளையாட்டுத் துறையில் முன்னணி நாடாகக் கொண்டு வருவதற்கான இளைஞர்களின் சிந்தனைகளை அரசு தெரிந்துகொள்ள இது சிறந்த வாய்ப்பாக அமையும். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நடத்தப்படும் வினாடி வினா போட்டியில் வெற்றி பெறும் இளைஞர்களுக்குத் டெல்லி வரை செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
தொடர்ந்து சிறந்த விளையாட்டு வீரர்கள், விளையாட்டுத் துறையில் ஈடுபடுவதால் ஏற்படும் எதிர்கால நன்மைகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். இச்செய்தியாளர் சந்திப்பின் போது காமராஜ் கல்லூரி துணை முதல்வர்கள் அருணாச்சல ராஜன், செந்தில் மற்றும் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.


