தூத்துக்குடியில் உள்ள பழமையான புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளியின் 142-வது ஆண்டுவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளியின் அதிபர் மரிய சிங்கராயர் விழாவிற்குத் தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார். பள்ளியின் தாளாளர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் தலைமையாசிரியர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் முன்னாள் மாணவரும், தூத்துக்குடி சிவந்தி ஜோ காயர்ஸ் உரிமையாளருமான சிவாகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தமது உரையில் பள்ளியில் பயின்ற இளமைக் கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதோடு, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையக் கல்வியே சிறந்த வழி என வலியுறுத்தினார்.
பள்ளியின் ஆண்டறிக்கையைத் தாளாளர் பிரான்சிஸ் சேவியர், தலைமையாசிரியர் அமல்ராஜ் மற்றும் உதவித் தலைமையாசிரியர்கள் இருதய வளனரசு, பால் பெனடிக்ட், ஜார்ஜ் பீட்டர் பாபு, ஞானசேகர், ஹம்பிரி மிராண்டா ஆகியோர் வாசித்தனர். தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக ஆசிரியர் சகாயராஜ் வரவேற்புரை ஆற்ற, நிறைவாக உடற்கல்வி ஆசிரியர் மார்ட்டின் ராஜதுரை நன்றியுரை கூறினார். இவ்விழாவில் மாணவர்கள், பெற்றோர், அருள்தந்தையர், அருள்சகோதரிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் என 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


