தூத்துக்குடியில் ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 8வது பொதுக்குழு மற்றும் 11வது செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (20.11.2023) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (தமிழ்நாடு ஊரக புத்தாக்க சங்கம்) 8வது பொதுக்குழு மற்றும் 11வது செயற்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தொழிற்குழு மற்றும் உற்பத்தியாளர் குழுக்களின் வணிக விரிவாக்க நிதி பற்றிய விபரம் கூறப்பட்டது. இணைமானிய நிதி திட்டம் மூலம் நிதி பெற்ற தொழில்சார் சமூக வல்லுநர்கள் மற்றும் வங்கிகளில் நிலுவையில் உள்ள விண்ணப்ப விவரம் தெரிவிக்கப்பட்டது. மேலும், சமுதாய திறன் பள்ளி மற்றும் சமுதாய பண்ணைப் பள்ளி அமைக்கப் பெற்ற நிதி விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படும் ஆழ்வார்திருநகரி, கருங்குளம், சாத்தான்குளம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 ஒன்றியங்களில் பணியமர்த்தப்பட்ட 105 ஊராட்சிகளில் உள்ள தொழில்சார் சமூக வல்லுநர்களுக்கு நடைபெற்ற தொழில் முனைவோர் பயிற்சி பற்றி கூறப்பட்டது.
இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர்(பொறுப்பு) தமிழ்நாடு ஊரக வளர்ச்சி முகமை, இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கம் வீரபுத்திரன், முன்னோடி வங்கி மேலாளர் (பாரத ஸ்டேட் வங்கி) துரைராஜ், மாவட்ட செயல் அலுவலர் (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) தாமோதரன், செயல் அலுவலர் செல்வகுமார், மாவட்ட தொழில் மைய அலுவலர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் திட்ட செயலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


