திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் மற்றும் காவல் நிலைய அதிகாரிகளைக் கண்டித்துப் பொதுமக்கள் இலவச சட்ட உதவி சங்கம் சார்பில் வரும் ஜூன் 23-ஆம் தேதி மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது….
திருச்செந்தூர் நடைபாதை ஓர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பொதுமக்கள் இலவச சட்ட உதவி சங்கத்தின் மாவட்டத் தலைவரும், சமூக ஆர்வலருமான மாரியப்பன் தலைமை தாங்கினார்.
கோவில் நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து சிறுகுறு வியாபாரிகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதைக் கண்டித்து, வரும் ஜூன் 23-ஆம் தேதி திருச்செந்தூரில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பொதுமக்கள் இலவச சட்ட உதவி சங்கத்தின் இந்த போராட்ட அறிவிப்பை அறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர், சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு அவசரச் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி, இன்று (சனிக்கிழமை) மாலை 3.00 மணியளவில் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து இருதரப்பினருக்கும் இடையேயான சுமூகப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள அரசு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் சிறுகுறு வியாபாரிகளுக்கு ஆதரவாகச் சுமூக உடன்பாடும், நிரந்தரத் தீர்வும் ஏற்படாவிடில், ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் ஜூன் 23-ஆம் தேதி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களைத் திரட்டி திருச்செந்தூரில் மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை நடத்துவது என ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் அமைப்பின் மாநிலத் தலைவர் ரத்தினவேல் பாண்டியன், மாநில அமைப்பாளர் ஆல்பர்ட் ஜாப்ரோ வில்சன், மாநில இணைச்செயலாளர் லிங்கராஜ், மாநில மகளிர் அணி இணை செயலாளர் ஜெயந்தி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜய் கோபால் வர்மா ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், மாவட்டச் செயலாளர் மனோகரன், மாவட்டத் துணைத் தலைவர் சபரி வாசு, மாவட்டத் துணைப் பொருளாளர் நித்திய வருனேஷ், மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவர் சுப்புத்துரை, திருச்செந்தூர் தொகுதித் தலைவர் ஜோசப், வழக்கறிஞர் பாலமுருகன், மாவட்ட மகளிர் அணி தலைவி வழக்கறிஞர் ராஜசங்கர், மாவட்ட வழக்கறிஞர் தலைவர் உமா பரமானந்தம், மாவட்ட இளைஞரணி தலைவர் வெற்றிவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் மாடசாமி, மாவட்ட இளைஞரணி பொருளாளர் விக்னேஷ், மாவட்ட மாணவரணி செயலாளர் வள்ளிநாயகம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் துளசி மணி மற்றும் அருள் உட்படப் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.


