சாத்தான்குளம் அருகே இளைஞரை வழிமறித்து வாளால் தாக்கிய 3 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை முத்தம்மாள்புரம் பகுதியை சேர்ந்த குமார் மகன் செல்வ சூர்யா (23). இவர் திசையன்விளையில் உள்ள செல்போன் கடையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் வேலை முடிந்து வீட்டிற்கு அரசூர் அருகே உள்ள பனைவிளை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது அவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அதிசயபுரம் பகுதியில் சென்றபோது அவரை 3 பேரும் வழிமறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சூர்யா தப்பி ஓட முயற்சித்துள்ளார். அதற்குள் பெரிய வாளால் அவரை 3 பேரும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து, அந்த 3 பேரையும் மடக்கி பிடித்தனர்.
ஒரு மரத்தில் அவர்களை கட்டி வைத்து விட்டு தட்டாரமடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு போலீசார் விரைந்து சென்று, 3 பேரையும் மீட்டனர். சூர்யாவை சாத்தான்குளம் அரசு மருவத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிடிபட்ட 3பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள், நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்த மதன் மகன் மகன் ஸ்டெபின் (22), நிக்சன் மகன் நித்திக் (18), ஆலங்குளத்தை சேர்ந்த ஆறுமுகராஜ் எ மகன் பாலசுதன் என தெரியவந்துள்ளது. 3 பேரையும் போலீசார் கைது செய்து, சூர்யாவை வாளால் வெட்டியது ஏன்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


