தூத்துக்குடி திரேஸ்புரம் லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் சகாய குமார் மகன் மரடோனா (30), கப்பலில் மாலுமியாக வேலை பார்த்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இவர் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் கப்பலில் இருந்து வீட்டுக்கு வந்தார். நேற்று மாலை தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த மதன் குமார் மற்றும் ரெக்ஸன் உள்பட 3 பேர் ஒரே பைக்கில் வேகமாக சென்றதாக தெரிகிறது.
இதை பார்த்த மரடோனா அவர்களை சத்தம் போட்டு உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மதன்குமார் உள்ளிட்டவர்கள் அரிவாளால் மரடோனாவை சரமாரியாக தலையில் வெட்டியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 5 மணி அளவில் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து, மதன் குமார் உள்பட 3பேரை தேடி வருகிறார். திரேஸ்புரம் பகுதியில் போதைப் பொருட்கள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளது. இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி உள்ளனர். நேற்று நடந்த கொலை சம்பவம் கஞ்சா போதையில் தான் நடந்துள்ளது என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மதன் குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


