தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவத்திருப்பதிகளில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில், புகழ்பெற்ற சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு உற்சவர் பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நீளாதேவி அம்பாள்களுடன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அவருடன் நம்மாழ்வாரும் எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஆழ்வார்திருநகரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவிழா நடைபெறும் பத்து நாட்களும் தினமும் மாலையில் சுவாமி பொலிந்து நின்ற பிரான் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விழாவில் ஏப்ரல் 23-ஆம் தேதி கருட சேவை, ஏப்ரல் 27-ஆம் தேதி தேரோட்டம், ஏப்ரல் 28-ஆம் தேதி தீர்த்தவாரி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர்.


