தூத்துக்குடியில் தீ விபத்துக்கள் குறித்தும், அதனை அணைக்கும் முறைகள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பான இரண்டு நாள் இலவசப் பயிற்சிகள் ஜூன் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட அலுவலர் கருணாகரன் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் இந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் வந்து கலந்துகொள்ளும் வகையில் இரண்டு வேலைகளாக இந்த இலவசப் பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன. இதன்படி காலை அமர்வு முற்பகல் 11:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும், மாலை அமர்வு பிற்பகல் 4:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையும் நடைபெறும்.
இப்பயிற்சி வகுப்புகளில் தீ விபத்துக்களைத் தடுப்பது எப்படி, விபத்து ஏற்படும் போது உடனடியாகச் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்துத் தீயணைப்பு வீரர்களால் நேரடி விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இந்த இலவசப் பயிற்சியில் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தீயணைப்புத் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


