வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை நேரத்தை உடனடியாக அமல்படுத்தி அறிவிக்கக் கோரி, அகில இந்திய வங்கி பணியாளர் சங்க கூட்டமைப்பின் (UFBU) சார்பில் தூத்துக்குடியில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி பீச் ரோடில் உள்ள 381 வங்கி வளாகத்தின் முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, UFBU தூத்துக்குடி வங்கி தொழிற்சங்க நிர்வாகி திரு. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கனரா வங்கி தொழிற்சங்க நிர்வாகி செந்தில்குமரன் வரவேற்புரையாற்றினார்.
இப்போராட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி தொழிற்சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், துரைராஜ், மைக்கேல் ஞானராஜ் மற்றும் பாங்க் ஆஃப் பரோடா வங்கி தொழிற்சங்க நிர்வாகி சன்னாசி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திச் சிறப்புரையாற்றினர்.
வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலன் மற்றும் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, வாரத்தில் 5 நாட்கள் பணியை உடனடியாக அரசு மற்றும் வங்கி நிர்வாகம் பிரகடனப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. இதில் திரளான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.


