தூத்துக்குடியில் நாளை (ஆகஸ்ட் 14-ஆம் தேதி) நடைபெறவிருந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், உள்ளூர் விடுமுறை காரணமாக ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாதந்தோறும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான முகாம் நாளை (14.08.2026 – வெள்ளிக்கிழமை) கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற இருந்தது.
எனினும், கயத்தாறு வட்டம் காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள ‘தூய பரலோக மாதா பேராலயத் திருவிழாவை’ முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 14) தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நடைபெறவிருந்த வேலைவாய்ப்பு முகாம் வரும் 21.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் என உதவி இயக்குநர் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளார்.


