தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே க.சுப்பிரமணியபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மகாசக்தி, ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முனியசாமி திருக்கோவிலின் 18-ஆம் ஆண்டு ஆடி கொடை விழா விமர்சையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி, தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் கிடா வெட்டி, பொங்கலிட்டுப் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.ஆடி கொடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த முளைப்பாரிகளைச் சுற்றிப் பெண்கள் கும்மியடித்துப் பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, ஆண்களும் பெண்களும் இணைந்து பலவகையான முளைப்பாரிகளை ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எட்டையாபுரம் சாலையிலிருந்து பைப்பாற்றுக்கு எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்துத் தங்களது நேர்த்திக்கடனைச் சிறப்பாக நிறைவு செய்தனர். இவ்விழாவில் க.சுப்பிரமணியபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


