தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில், 2026 – 2027 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்க்கை பெறும் பொருட்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். இசைப்பள்ளியில் 3 ஆண்டுகள் படித்து முடித்த மாணவர்கள் இசைக் கல்லூரிகளில் நேரடியாக பட்டயப் படிப்பில் 3 ஆம் ஆண்டு சேரலாம்.
அனைத்து மாணாக்கர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000/- கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இப்பள்ளியில் பாரம்பரிய கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளி காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை முழுநேரப் பள்ளியாகும். 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் சேரலாம்.
பயிற்சி காலம் 3 ஆண்டுகள். பயிற்சி முடிவில் தமிழ்நாடு தேர்வுத் துறையால் தேர்வு நடத்தி அரசுத் தேர்வுகள் இயக்குநரால் இசைப் பள்ளி தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. சிறப்பு கட்டணமாக ஆண்டிற்கு ரூ.350/- மட்டும் செலுத்த வேண்டும். மாணவ, மாணவியருக்கு நகரப் பேருந்தில் இலவச பேருந்து பயணச்சலுகை உண்டு.
தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலைகளை பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் சேர்ந்து பயன் பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இப்பள்ளியில் சேர விரும்புவோர் உடனடியாக தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப் பள்ளி, டி.சவேரியார் புரம், மேலூர், சிலுவைப்பட்டி அஞ்சல், தூத்துக்குடி 9487739296 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். மே 12 ஆம் தேதி முதல் 2026 – 2027 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


