தூத்துக்குடி மாநகரில் விதிமுறைகளை மீறி இயங்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று போதைநோய் நலப்பணிக்குழு வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாநகரில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அரசு விதிமுறைகளை மீறி செயல்படும் டாஸ்மாக் கடைகளை 500 மீட்டர் தொலைவிற்கு அப்பால் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என ‘பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை போதைநோய் நலப்பணிக்குழு’ கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அதன் இயக்குநர் அருள்பணி ஜெயந்தன் டி கிரேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் மதுபானக் கடைகள் அமையக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், தூத்துக்குடி மாநகரின் முக்கிய பகுதிகளில் இந்த விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.
கல்வி மற்றும் வழிபாட்டுத் தலங்கள்: கருப்பட்டி சொசைட்டி மற்றும் அன்னதாய் கல்யாண மண்டபம் அருகில் உள்ள மதுக்கடைக்கு மிக அருகிலேயே சிஎஸ்ஐ சர்ச்சும், பள்ளியும் அமைந்துள்ளன. அதேபோல் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியிலும் பள்ளி மற்றும் தேவாலயத்தின் அருகிலேயே கடைகள் இயங்கி வருகின்றன.
போக்குவரத்து நெரிசல் பகுதிகள்: அந்தோனியார் கோவில் மார்க்கெட், ஒன்-வே (One-way) சாலையில் உள்ள மாட்டுத்தாவணி மதுபான பார்கள் மற்றும் எஸ்ஏவி பள்ளி அருகில் உள்ள இரண்டாம் ரயில்வே கேட் கடைகள் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே இது குறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது. தற்போது தமிழக அரசு கொடுத்துள்ள இரண்டு வார கால அவகாசத்திற்குள், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த கடைகளை வரிசைப்படுத்தி, மக்கள் வசிக்காத மாற்று இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சேர்வைக்காரன்மடம் ஊராட்சி
இதுபோல், சேர்வைக்காரன்மடம் ஊராட்சி காமராஜர் நகர் பகுதியில் 415 மீட்டரில் சந்தனமாரியம்மன் கோவில், 447 மீட்டரில் CSI தேவாலயம், 500 மீட்டரில் ஜெயா பாலிடெக்னிக், 50 மீட்டரில் அரசு பெண்கள் கழிப்பிடம் மற்றும் அரசு நர்சரி பகுதியில் உள்ள காமராஜர் நகர் டாஸ்மாக் கடை எண் 10144-ஐ ஆகியவற்றை பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் நலன் கருதி நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கபட்டுள்ளது


