தமிழக காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்கள் வென்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த இருவருக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில், தமிழ்நாடு மாநில காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த ஜன.05 முதல் 8ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில், தமிழக காவல்துறையின் வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், சென்னை பெருநகர காவல், கமாண்டோ படையைச்சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் தென் மண்டலம் சார்பாக கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் இரட்டினமுத்து என்பவர் 300 மீட்டர் ரைபில் பிரிவில் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், தூத்துக்குடி மாவட்ட ஆயுதப் படையைச் சேர்ந்த காவலர் தர்மதுரை என்பவர் 350 மீட்டர் ரைபில் பிரிவில் கலந்துகொண்டு 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர். அவர்கள் இருவரையும் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார். இந்நிகழ்வின்போது மாவட்ட தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கிறிஸ்டி உடனிருந்தார்.


