தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் குடோன் முன்பு, பல லாரிகளில் கொண்டு வரப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளுக்குத் தேவையான அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மாவட்ட வாரியாக உள்ள அரசு சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தூத்துக்குடி டவுன் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்குப் பொருட்களை விநியோகம் செய்ய ஜார்ஜ் ரோட்டில் உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு குடோன் செயல்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, வெளி மாவட்டங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகள் இந்தக் குடோனுக்குக் கொண்டு வரப்பட்டன. ஆனால், குடோன் அதிகாரிகள் இந்த மூட்டைகளை இறக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாகத் தூத்துக்குடி நகர் பகுதியில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. குடோன் முன்பு சாலையில் நிறுத்தப்பட்டுள்ள 20-க்கும் மேற்பட்ட லாரிகளில், சில லாரிகள் மட்டுமே தார்ப்பாயால் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான லாரிகள் தார்ப்பாய் இன்றி திறந்த நிலையில் இருப்பதால், உள்ளே இருக்கும் உணவுப் பொருட்கள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.
“மக்களின் வரிப்பணத்தில் கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பின்றி மழையில் நனைய விடுவது அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலாகும். இவ்வாறு நனைந்த பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்கும்போது, அவை மனிதர்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிடும். எனவே, உடனடியாக இந்த மூட்டைகளை இறக்கிப் பாதுகாப்பான இடத்தில் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்” எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உணவுப் பொருட்கள் வீணாவதைக் கண்டும் காணாமல் இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


