தூத்துக்குடி சின்னத்துரை அன் கோ ஜவுளிக்கடை வளாகத்தில் குலசை தசரா பக்தர்கள் குழுவினர் ஆடி பாடி வாடிக்கையாளர்கள், பக்தர்களை பரசவப்படுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்து இங்குதான் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
தசரா திருவிழாவை முன்னிட்டு காப்புக்கட்டிய தசரா குழுவினர் காளி, முருகன், சிவன், குறவன்-குறத்தி உள்பட பல்வேறு வேடமணிந்து ஊர் ஊராக காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். மேளம், டிரம் செட், செண்டா மேளம், கரகாட்டம், போன்ற கலை நிகழ்ச்சிகளை கோலாகலமாக நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி தமிழ் சாலையில் இயங்கி வரும் சின்னத்துரை அன் கோ ஜவுளிக்கடையில் காளி, பெருமாள், சிவன், பார்வதி, முருகன் போன்ற வேடமணிந்த குலசை தசரா பக்தர்கள் குழுவினர் சுமார் 1 மணி நேரம் ஆடி பாடினர். இதனை ஏராளமான பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் கண்டு ரசித்தனர்.


