நான் எழுதிய தூத்துக்குடி மாவட்ட வரலாறு நூல் விமர்சனத்தினை தினமணி நூல் அரங்கத்தில் வெளியிட்டுள்ளார்கள். வெளியிட்ட ஆசிரியர் குழுவிற்கு நன்றி . பொன்சொர்ணா பதிப்பகம் விலை 250/-
நூல் வேண்டுவோர் 8760970002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.-முத்தாலங்குறிச்சி காமராசு
அந்த நூல் விமர்சனம் வருமாறு.
தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்புகளை மாவட்டம் தோன்றிய வரலாறு முதல் பழைய செரர்கோனியம் வரையிலான 206 தலைப்புகளில் அமைந்த சிறுசிறு கட்டுரைகள் மூலம் சுவைபடத் தந்துள்ளார் நூலாசிரியர்.
ஒருங்கிணைந்த திரு நெல்வேலி மாவட்டத்தைப் போலவே திரு ஐவகை நிலங்களைக் கொண்டது தூத்துக்குடி. நாட்டின் சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய ஏராளமான நிகழ்வுகள் இந்த மண்ணில் நடந்தேறியுள்ளன.
தமிழர்களின் பழங்கால நாகரிகத்தைப் பறை சாற்றும் ஆதிச்சநல்லூர், கொற்கை துறைமுகம் போன்ற வரலாற்றுத் தொன்மைகளுக்கும், நவ திருப்பதி, நவகயிலாயம், திருச்செந்தூர், தூத்துக் குடி பனிமயமாதா என ஆன்மிக திருத்தலங்களுக்கும் பெயர் பெற்ற இம்மாவட்டத்தின் சிறப்புகளை வாசிக்க வாசிக்க பிரமிப்பு மேலிடுகிறது.
வெட்டுவான் கோயில், கழுகுமலை சமணர் சிற்பம், முத்துக்குளித்தல், தேரிக்காடு, உடன்குடியில் அமையவுள்ள இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் என பக்கத்துக்கு பக்கம் தகவல் களஞ்சியம்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பழங்காலப் பொருள்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் அருங்காட்சியக புகைப்படங்களை பின்னிணைப்பாகச் சேர்த்திருப்பது கூடுதல் சிறப்பு.
உள்ளூர் மக்கள் அறிந்திராத அவர்களையே வியக்க வைக்கும் நூற்றுக்கணக்கான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழர் வரலாற்றில் தூத்துக்குடியின் முக்கியத்துவத்தை அறிய உதவும் நூல்இது.


