தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், இன்று (ஏப்.16) வரை மொத்தம் சுமார் 1.05 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதைக் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் இன்று (16.04.2026) வரை கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம்: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக மொத்தம் ரூ. 83,93,266 ரொக்கத்தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொருட்கள் மற்றும் மதுபானம்: ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 15,48,231 மதிப்பிலான பொருட்களும், ரூ. 5,58,772 மதிப்பிலான மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விடுவிக்கப்பட்ட தொகை: பறக்கும் படைகளால் பறிமுதல் செய்யப்பட்ட தொகையில், உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு ரூ. 83,29,716 ரொக்கத்தொகை சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெருமளவிலான பணத்தைக் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும் என்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


