
நெல்லை மாநகரை பொறுத்தவரை எத்தனை பஸ் நிலையம் வந்தாலும் போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. புது பஸ் நிலையம் வந்தவுடனே போக்குவரத்து நெரிசல் குறைந்து விடும் என்றார்கள். ஆனால் தென்காசி செல்ல வேண்டும் என்றால் நெல்லை சந்திப்புக்குத்தான் செல்லவேண்டும். அதோடு மட்டுமல்லாமல் வண்ணார்பேட்டை பகுதியிலும், முருகன்குறிச்சி பகுதியிலும், குலவணிகர் புரம் ரயில்வே கேட்டிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.
இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், பெரும் பாதையான நான்கு புறம் உள்ளபாதையில் செல்லும் வாகனங்கள் நெல்லை மாநகருக்குள் வரக்கூடாது.
16 ஆம் நூற்றாண்டில் பாளையங்கோட்டைக்கு நான்கு வழி இருந்துள்ளது. அது போலவே தற்போதும் நாலு புறமும் இருந்தும் பெரும் போக்குவரத்து இருக்கிறது. தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம், தென்காசி போன்ற பெரும் பாதைகளும், அம்பாசமுத்திரம் , சங்கரன்கோயில் போன்ற பாதைகளும் திருநெல்வேலி நகரத்தினை சுற்றியுள்ளது. இந்த பாதைகளில் வரும் வாகனங்கள் மற்ற பாதைகளில் செல்ல பாளையங்கோட்டை அல்லது திருநெல்வேலிக்கு வரவேண்டியது உள்ளது. இதனால் தான் ரிங் ரோடு என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். இதற்காக ரூ.370 கோடியில் மேற்கு புறவழிச்சாலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் தாழையூத்தில் துவங்கி சத்திரம் புதுக்குளம், ராமையன்பட்டி, அபிசேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக வளாகம் அருகே தென்காசி சாலை, திருப்பணி கரிசல்குளம், கொண்டாநகரம், சுத்தமல்லியில் கடையம் சாலை, நரசிங்கநல்லூர், கருங்காடு, கோபாலசமுத்திரம் தாமிரபரணி பாலம், தருவையில் அம்பாசமுத்திரம் சாலை, முன்னீர் பள்ளம் வழியாக ரெட்டியார்பட்டி அருகே ஜோதிபுரம் நான்கு வழிச்சாலையில் இணைகிறது.
இதற்காக 92.42 ஹெக்டேர் நிலம் கையகப்படுத் தப்படுகிறது. நில ஆர்ஜிதத்திற்காக ரூ.78.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 12 மீட்டர் அகல இருவழிச்சாலை, 33 கிலோ மீட்டர்தூரம் அமைகிறது. ஏற்கனவே இத்திட்டத்திற்காக 30 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் சென்ற பகுதியில் இந்த சாலைக்காக இடங்களை கையகப்படுத்திஉள்ளார். இந்த சாலை வந்து விட்டால் பச்சையாற்று மாடன் சாலை -ஓரத்திலேயே வந்து விடுவார். அந்த சமயத்தில் இந்த ஆலயம் மிகப்பெரிய ஆலயமாக உருவெடுக்கும்.
இந்த சாலை திறக்கும்போது மதுரையிலிருந்தும், கன்னியாகுமரியில் இருந்தும், தூத்துக்குடியில் இருந்தும் வரும் வாகனங்கள், திருநெல்வேலிக்குள் நுழையாமல் தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில் சாலைகளுக்குச் செல்ல முடியும். திருநெல்வேலி மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். மாநகரப் பகுதி மேலும் வளர்ச்சி அடையும்.
தற்போது பச்சை பசேல் என்று காட்சியளிக்கும் இந்த இடத்தில் தான் அந்த புறவழிச்சாலை வருகிறது என்பது சந்தோசமாக இருந்தது. விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப நாமும் மாறிக்கொண்டேதான் இருக்க வேண்டியது உள்ளது. ஆனால் சாலை இருப்புறமும் இருக்கின்ற விளைநிலங்கள் குடியிருப்பாகவும் வணிக வளாகமாகவும் மாறாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நமக்கு சந்தோசம் தான்.
பச்சையாற்று மாடன் கோயில் நின்று பார்த்தோம். எனக்கு அவர் மாடனாக தோன்றவில்லை. காரணம் பச்சைமாடன் பெருத்த மார்புடன், மீசை இல்லாமல், காதில் அணிகலன்கள் அணிந்த வண்ணம் இருக்கிறார். அப்படியென்றால் இவர் பச்சையாற்று மாடத்தியாக இருப்பார். பெரும்பாலுமே நதியை நாம் பெண்ணாகத்தானே போற்றி பாதுகாக்கிறோம். அப்படி பார்க்கும் போது இங்கே பச்சையாற்று கரையில் பச்சையாற்று அம்மன் அல்லது பச்சையாற்று மாடத்தி தானே இருக்க வேண்டும்.
சரி இதைப்பற்றி ஆய்வாளர்களிடம் விட்டு விடுவோம். தொடர்ந்து இந்த மாடன் அல்லது மாடத்தியை பற்றி வேறு வரலாறு இருக்கிறதா? என விசாரித்தோம்.
நிவேக் தனது தந்தை இசக்கி அய்யா மூலமா இந்த மாடனை பற்றி விசாரித்து என்னிடம் பேசினார். இசக்கி போக்குவரத்து துறையில் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்த இடத்தில் இருந்து பிடிமண் எடுத்து கோபாலசமுத்திரம் வடக்கூரில் ஒரு கோயிலை கட்டி வழிபடுவதாக அவர் கூறினார்.
இந்த கோயில் வரலாற்றை சிபிலி ராஜா வரலாற்றோடு இணைத்து பேசினார்.
நாம் ஏற்கனவே சிபிலி ராஜா வராற்றை இந்த நூலில் முன் பகுதியில் பேசியுள்ளோம். அதன்படியே நாம் சிபிலி ராஜா பாளையங்கால்வாயில் தொடர்ந்து உடைப்பு விழ, நரபலி கொடுத்தால் தான் இந்த உடைப்பு நிற்கும் என ஜோதிடர்கள் கூறினார்கள். தன் குடிமக்கள் யாரும் உயிரிழக்க கூடாது என தானே இந்த உடைப்பு பகுதியில் படுத்துக்கொண்டு, தன் மீது மணலை அள்ளிப்போட்டு தானே நரப்பலியானார். அதன் பின் உடப்பு நின்றது. மக்களின் நல்வாழ்வுக்காக உயிர் நீத்த சிபிலி ராஜா தெய்வமானார். சிபிலி ராஜாவுக்கு காட்சி கொடுத்து சொர்க்கத்துக்கு அழைத்துச்சென்றவர், இந்தபச்சையாற்று மாடன் தான் என்று அவர் கூறினார்.
பச்சையாற்று மாடனை கோபாசமுத்திரத்தினை சேர்ந்தவர்கள் வணங்குகிறார்கள்.
ஒரு காலத்தில் பச்சையாற்று கரையில் தான் மாடன் இருந்துள்ளார். இவர் விவசாயிகளின் பாதுகாவலன். பிற்காலத்தில் கான்சாகிப் பளையங் கால்வாயில் மடையை கட்டி பச்சையாற்றின் போக்கை மாற்றியுள்ளார்.
அவர் அப்படி போக்கை மாற்றிய பிறகு தருவை வழியாக பச்சையாறு ஓடியுள்ளது. அதற்கு முன்பே அந்த இடத்தில் வாணிப ஓடை இருந்துள்ளது. இந்த மடை கட்டி தற்போது ஆலங்கால்வாயாக பச்சையாறு ஓட வழி வகுத்து உள்ளார்கள் என்று நிவேக் எங்களிடம் கூறினார்.
இந்த ஓட்டம் மாறிய பிறகு பச்சையாற்று மாடன் வயல்வெளிக்குள் வந்து விட்டார். இங்கு சாதாரணமாக செல்ல இயலவில்லை. நான் ஏற்கனவே கூறியபடியே கடினமான பயணம்செய்து தான் செல்லமுடிந்தது. தற்போது இந்த மாடன் அருகே ஒரு வடிகால் ஒன்றும் ஒடுகிறது. இந்த வடிகால் கரையில்தான் பச்சையாற்று மாடன் வீற்றிருக்கிறார்.
தற்போது ரிங்ரோடு பெரிதாக வரும் போது பச்சைமாடன் வெளியே தெரிந்து விடுவார்.
கான்சாகிப் அவர்களின் நீர் மேலாண்மை, ஒருஆற்றையே திருப்பி போட்டு இருக்கிறது என்றாலும் செவி வழியாகத்தான் இக் கதை பேசப்படுகிறதே தவிர, இதற்கான கல்வெட்டுகள் எதுவும் பெரிதாக இல்லை.
தருவை தடுப்பணையில் கான்சாகிப் அணையை கட்டினான் என்ற தகவல் உள்ளது. இதை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தொல்லியல் துறை தலைவர் டாக்டர் சுதாகர் தலைமையில் தொல்லியல் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் தந்த அறிக்கையை இந்த நூலில் முன்பகுதியில் தெரிவித்து உள்ளோம்.
தருவை கிராமத்தில் நான் பார்த்த சுடலை கோயில் கான்சாகிப் பெயரை பறைசாற்றும் வண்ணம் உள்ளது. பெரும்பாலுமே சுடலைக்கு பல பெயர்கள் உண்டு. ஊர்க்காடு சுடலை, ஒத்தப்பனை சுடலை, சிவலப்பேரி சுடலை, ஆழிகுடி மாரடைச்சான் சுடலை, ஆறுமுக மங்கலம் சுடலை என கூறுவோம். இந்த சுடலைகளை தான் பிடிமண் எடுத்து பல இடங்களுக்கு கொண்டு சென்று வணங்கி வருகிறார்கள். சிவலப்பேரியில் இருந்து சுடலை பல இடங்களுக்கு சென்று இருக்கிறார். சிவலப்பேரிக்கு எதிர்கரையில் இருக்கும் கான்சாகிப்புரத்தில் இருந்து சுடலை வேறு எங்கும் சென்றதாக இதுவரை எனக்கு தெரியவில்லை.
ஆனால் தருவையில் உள்ள சுடலைக்கு பெயர் கான்சாபுரம் சுடலை. இதைப்பற்றி அங்கிருந்த ஒருவரிடம் கேட்டபோது “இது கான்சாபுரத்தில் இருந்து வந்த சுடலை” என்றார். நான் அவரிடம், “எந்த கான்சாபுரத்தில் இருந்து வந்த சுடலை” என்று கேட்டேன். அவர் யோசித்தார்.
ஏன் என்றால் இரண்டு இடத்தில் கான்சாபுரம் இருக்கிறது. ஒன்று சிவலப்பேரி அருகில். மற்றொன்று மேலச்செவலில் உள்ளது. மேலச்செவல் மிகவும் சிறிய கிராமம். அந்த கான்சாபுரத்தில் வித்தியாசமான சுடலை ஒருவரை கண்டேன். அதைப்பற்றி எனது தலைத்தாமிரபரணி நூலில் எழுதியுள்ளேன். ஒருவேளை அந்த சுடலையை பிடிமண் எடுத்து வந்து இருப்பார்களோ என நினைத்தேன்.
ஆனால் தருவை கான்சாபுரம் சுடலை கோயிலில் மத்தியில் மிக உயரமான ஒரு பூடம் உள்ளது. இருபுறம் இரண்டு பூடம் உள்ளது. எனக்கு தோன்றியது. இருபுறமும் இருப்பது சுடலையும், பேச்சியும் உள்ளனர். அப்படியென்றால் மத்தியில் இருப்பது யார். அவர் தான் கான்சாகிப் என நினைத்தேன்.
அதாவது இந்த ஊரில் நீர் மேலாண்மை ஏற்பட செய்த கான்சாகிப் என்ற மருதநாயத்தினை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டு கொன்றார்கள். அவன் இறந்த பிறகு அவன் உடலை பல துண்டுகளாக வெட்டி அதில் ஒரு பகுதியை திருநெல்வேலியில் புதைத்தார்கள் என்று கூறுகிறார்கள். திருநெல்வேலியில் எங்கு புதைத்தார்கள் என தெரியவில்லை. ஆனால் இங்கே இருக்கும் கான்சாபுரம் சுடலையார்?.
நம் ஊருக்கு இவ்வளவு பெரிய நீர் மேலாண்மையை தந்த கான்சாகிப் என்னும் மருத நாயகத்தினை கொன்று விட்டார்கள். அவர் நினைவாக இந்த சுடலையை உருவாக்கி மத்தியில் உள்ள சுடலை தான் கான்சாகிப் சுடலையோ என எண்ணத்தோன்றுகிறது. வருங்காலத்தில் வரும் சிறு தெய்வ வழிபாடு ஆய்வாளர்கள், இதை கருத்தில் கொண்டு ஆய்வு செய்யுங்கள்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் நிறைய கொலையுண்ட தெய்வங்களுக்கு நிலயம் கொடுத்து, அதை பூடம் போட்டு வணங்கி வருகிறோம். வாழும் தெய்வங்களான பட்டவராயன், கசமுத்து போன்றவர்களுக்கு இதே போல் நிலயம் வழங்கப்பட்டுள்ளது.
ஊர்காடு பகுதியிலும், சுத்தமல்லி பகுதியிலும் ஆங்கிலேய துரை ஒருவருக்கு பூடம் போட்டு வணங்கி வருகிறார்கள். அப்படியிருக்கும் போது இந்த சுடலை கோயிலில் கான்சாகிப் என்ற மருதநாயகத்துக்கு பூடம் போட்டு, அவர் தந்த நீர் மேலாண்மைக்கு நன்றி கூறியிருக்கலாமே.
ஆகவே தான் இதை ஆய்வாளர்கள் வசம் ஒப்படைக்கிறேன்.
அடுத்து தருவையில் உள்ள மற்றுமொரு கோயிலைப்பற்றி அறிவோம்.
(நதி வற்றாமல் ஓடும்)