
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 19 பேருக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : கடந்த 28.10.2021 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற தங்க நகையைப் பறித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற இருவரை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கிடைக்கப்பெற்ற வான்செய்தி தகவலின் அடிப்படையில் சம்பவம் நடைபெற்ற சிலமணி நேரத்தில் எதிரிகளைக் கைது செய்து சொத்துக்களைக் கைப்பற்றிய புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், உதவி ஆய்வாளர்கள் கண்ணன், வெள்ளத்துரை, முதல் நிலை காவலர் பரமசிவன், காவலர்கள் ஆரோக்கியராஜ் மற்றும் மாரிச்செல்வம் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 4 எதிரிகளின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்ட ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லெட்சுமி பிரபா அவர்களின் மெச்சதகுந்த பணிக்காகவும், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தும்,
நன்னடத்தை பிணை பத்திரம் பெற்ற எதிரி பிணை பத்திரத்தை மீறி ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட மேற்படி எதிரிக்கு 6 மாத சிறை தண்டனைப் பெற்றுக்கொடுத்த ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் ஜூடி மற்றும் முதல் நிலை காவலர் மாணிக்கராஜ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் வெளிநாடு சென்றுவிட்டுத் திரும்பி வரும்பொழுது சென்னையில் வைத்து காணாமால் போனதால் வந்த புகாரின் அடிப்படையில் காணாமல் போனவரைக் கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைத்த புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விநாயகம், சிறப்பு உதவி ஆய்வாளர் சத்தியசீலன் மற்றும் தலைமைக் காவலர் கவுஸ் முகைதீன்கான் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மோசடி வழக்கில் சம்மந்தப்பட்ட காரை கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தாறு சுங்கசாவடி பகுதியில் வாகன தணிக்கையின் போது கைப்பற்றிய கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பால் காவல்கள் கணேஷ்குமார் மற்றும் திருப்பதிகுமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற திருட்டுவழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 2 பேரை கைவிரல் ரேகை மூலம் அடையாளம் கண்டு வழக்கின் புலன் விசாரணைக்கு உதவியாக இருந்த தூத்துக்குடி ஒருவிரல் ரேகை பதிவுகூட உதவி ஆய்வாளர் முருகேஷ்வரி மற்றும் தலைமைக் காவலர் திருமுருகன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த போக்சோ வழக்கு எதிரி மற்றும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த போக்சோ வழக்கு எதிரி ஆகிய 2 எதிரிகளைக் கைது செய்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய தலைமைக் காவலர் மோகன்ராஜ் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட முயற்சி செய்து தப்பிச் சென்றவரை இருசக்கர வாகன ரோந்து பணியிலிருந்து துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய காவலர் சந்திரசேகரன் என்பவரின் மெச்ச தகுந்த பணிக்காகவும், 3 காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினரின் சிறந்த சேவையைப் பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிடத்துக் காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் பவித்ரா மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.