
வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் பீடத்தில் தை பூசத்திருவிழாவை முன்னிட்டு 1008 தீப ஜோதி ஏற்றுதல் நடைபெற்றது.
வல்லநாடு அருகே உள்ள பாறைக்காட்டில் வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் பீடம் உள்ளது. தனது உடலை எட்டு துண்டாக பிரித்து யோகம் செய்யும் சித்தராக வாழ்ந்த இவரின் சமாதி சிறப்பு பெற்றது. வள்ளலாரின் வழிதோன்றல் என போற்றப்படும் இவரது பீடத்தில் அவர் ஏற்றிய தீபங்கள் சுமார் 30 வருடங்களாக அணையாமல் எரிந்து வருகிறது.
இங்கு தை பூசத்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி கடந்த 30 ந்தேதி வருஷாபிசேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு திருஅருட்பா, அகவல் பாராயணம் நடைபெற்றது. 12.30 மணிக்கு அருள் ஆனந்த செந்தில் வினாயகப் பெருமானுக்கு மகா அபிஷேகம், மதியம் 1 மணிக்கு அலங்காரம், தீப ஆராதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
நேற்று தை பூசத்தினை முன்னிட்டு 31 ந்தேதி காலை 4.15மணிக்கு அபிஷேகங்கள், காலை 7.15மணிக்கு கூழ் பூஜை மற்றும் தீபாரதனை நடைபெற்றது. காலை 8.15மணிக்கு திருஅருட்பா அகவல் பாராயணம் நடந்தது. காலை 10.15 மணிக்கு கோபூஜையை தொடர்ந்து அருள் ஆனந்த சபையில் 1008 தீப ஜோதி ஏற்றுதல், மதியம் 12.15 மணிக்கு தை பூச பூஜையை தொடர்ந்து திருஅருட்பா, தேவாரம், திருவாசகம், திருப்பல்லாண்டு உடன் கூடிய ஜோதி வழிபாடு, மகாதீப ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.