
வல்லநாடு கிராம சபைக் கூட்டத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் தேசிய காசநோயகற்றும் திட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாடு ஊராட்சி இணைந்து 71 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தலைமை வகித்தார்.
வல்லநாடு ஊராட்சி எழுத்தர் சங்கர் வரவேற்றார். ஊராட்சி துணைத்தலைவர் சுப்புலெட்சுமி முன்னிலை வகித்தார். வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா பேசுகையில் காசநோய் என்பது காற்றின் மூலம் பரவும் ஒருவகை தொற்று நோய். காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும் போதோ தும்மும் போது மற்றவருக்கு இந்நோய் தொற்றுகிறது. இந்நோய்க்கு நல்லவர் – கெட்டவர், பணக்காரர்-ஏழை படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடு கிடையாது. யாரையும் எளிதில் தாக்கும் இந்த நோய் 2025க்குள் முழுவதும் கட்டுப்படுத்தி காசநோயில்லா வல்லநாடு கிராமத்தினை ஏற்படுத்த நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என பேசினார். மேலும் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கப்பட்டது. இறுதியாக ஜெயசந்திரன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பார்வையாளராக செல்வி, வல்லநாடு மணி, கவுன்சிலர் முத்துராமலிங்கம், வார்டு உறுப்பினர், சத்துணவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.