
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் முதுமக்கள் பயன்படுத்திய தாழிகள், பாறை கிண்ணம் உள்ளிட்ட பொருட்கள் கண்டு எடுக்கப்பட்டன.
இதைதொடர்ந்து, ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் என்பவர் மனிதர்கள் சிவகளை சுற்றுவட்டாரப் பகுதியில் வாழ்ந்தற்கான ஆதாரங்கள் கிடைந்துள்ளதால் அப்பகுதியில் அகழ்வாராய்சி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தார்.
இதற்கிடையில், ஆதிச்சநல்லூரில் 2004ம் ஆண்டு நடைபெற்ற அகழ்வாராய்ச்சி முடிவுகளை வெளியிட வேண்டும். ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றங்கரையில் அகழ்வாராய்ச்சி மீண்டும் நடத்த வேண்டும் என எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்நிலையில், ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட தாமிரபரணி நதிக்கரையில் அகழாய்வு செய்யப்படும் என அரசு அறிவித்தது.
இதைதொடர்ந்து, வெள்ளிக் கிழமை ஆதிச்சநல்லூர் பகுதியில் தொல்லியல்துறையினர் தரையில் ஊடுருவும் ரேடார் என்ற கருவி மூலம் அகழ்வாராய்சி செய்வதற்கான பகுதியை ஆய்வு செய்தனர்.
இதைதொடர்ந்து, சனிக்கிழமை சிவகளை பரம்பு பகுதியில் தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம், ஆதிச்சநல்லூர் கள இயக்குனர் பாஸ்கரன், சிவகளை கள இயக்குனர் பிரபாகரன் உள்ளிட்டோர் தரையில் ஊடுருவும் ரேடார் என்ற கருவி மூலம் அகழ்வாராய்சி செய்வதற்கான பகுதியை ஆய்வு செய்தனர்.
இந்த மாத இறுதிக்குள் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதிகளில் அகழ்வாராய்ச்சி தொடங்கும் என தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஆதிச்சநல்லூரில் மற்றும் சிவகளை பகுதிகளில் அகழாய்வு பணிகள் துவங்க உள்ளதால் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.